நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து இயக்கம்.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .!

By vinoth kumarFirst Published Oct 21, 2023, 12:08 PM IST
Highlights

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திமுக போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ‘நீட் விலக்கு நம் இலக்கு’ என்ற தலைப்பில் திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தில் கையெழுத்திட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

தமிழ்நாட்டில் நீட் தற்கொலையை தடுக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திமுக போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் அவ்வபோது நடத்தி வருகிறது. தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று திமுக சார்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். 

இதையும் படிங்க;- திமுக ஆட்சியை புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன குட்டி ஸ்டோரி..

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்;-  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பிலான மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கவுள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கில், மருத்துவ அணி – மாணவர் அணி நிர்வாகிகளுடன் நாம் தொடங்கி வைக்கவுள்ளோம். நீட் ஒழிப்புக்கான இந்த முன்னெடுப்பு, கழக மாவட்டங்கள்தோறும் ஒரே நேரத்தில் தொடங்கவுள்ளது.

இந்த நிகழ்வுகளில், பொதுமக்கள் – பெற்றோர்கள் – மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்று கையெழுத்து இடுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் – நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் காப்பதற்காக இடப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக ஓரணியில் திரள்வோம்.’ என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க;- இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்க! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் இன்று நடைபெற்ற சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது திமுக இளைஞரணி, மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பில் நீட் விலக்கு நம் இலக்கு என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்படவுள்ளது. இந்த கையெழுத்து ஆவணங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

click me!