சமூக நீதியை நிலை நாட்டியது நீட் தேர்வுதான்... திமுகவை ரவுண்டு கட்டிய அண்ணாமலை..!

By Asianet TamilFirst Published Sep 19, 2021, 9:24 PM IST
Highlights

நீட் என்பது சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய தேர்வாகும். நீட் தேர்வை அரசியல் காரணங்களுக்காக திமுகதான் தவறாக பயன்படுத்துகிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

கோவையில்அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஆட்சியில் இல்லாதபோது பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றது திமுக. இப்போது எதிர்க்கிறது. பெட்ரோல், டீசல் விலையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். இதில் எந்தத் தவறும் இல்லை.
கோவை மாநகர காவல்துறை திமுகவின் கூலிப்படையைப் போல உள்ளது. பிரதமர் மோடியின் பிறந்தநாள் போஸ்டரை கிழித்ததற்கு   நாங்கள் கண்டனத்தை தெரிவிக்கிறோம். நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் உயிரிழந்ததற்கு பாஜக மிகவும் வருந்துகிறது. நீட் என்பது சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய தேர்வாகும். நீட் தேர்வை அரசியல் காரணங்களுக்காக திமுகதான் தவறாக பயன்படுத்துகிறது. நீட் தேர்வு வராது என திமுக உறுதி அளித்ததே மாணவர்கள் இறப்புக்கு காரணம். 
நீட் தேர்வில் மட்டுமல்ல, மற்ற படிப்புகளிலும் முறைகேடு நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் தற்போதைய பாஜக கூட்டணி சுமூகமாகப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. 22-ஆம் தேதிக்குள் பங்கீட்டு இடங்கள் முடிவு செய்யப்படும். அதிமுக நிர்வாகிகள் வீடில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனைக்கு திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்” என்று அண்ணாமலை தெரிவித்தார். 

click me!