தேசியக் கொடியை அவமதித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தல் மனு தாக்கல் செய்துள்ளார்.
தேசியக் கொடியை அவமதித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தல் மனு தாக்கல் செய்துள்ளார்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, எஸ்.வி.சேகர் வெளியிட்ட வீடியோவில் காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் முதல்வர் தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு கொடியேற்றப் போகிறாரா என கூறியிருந்தார். தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி சேகர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் இணையவழி மூலம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது தேசியக் கவுரவப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறையினர் தன்னைக் கைது செய்யக்கூடும் எனக் கருதிய எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.