மோடி இதை உடனே செய்ய வேண்டும் இல்லை என்றால் போராட்டம் வெடிக்கும்..!! அதிரடியாக எச்சரித்த அழகிரி..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 22, 2020, 2:50 PM IST
Highlights

இதற்கு தீர்வு காணுகின்ற வகையில், இத்தகைய மத்திய அரசின் கூட்டங்களில் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் பயன்படுத்துகிற வகையில் உரிய ஆணையைப் பிறப்பித்து, அதற்கு பிரதமர் மோடி உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். 

மத்திய அரசின் கூட்டங்களில் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் பயன்படுத்துகிற வகையில் உரிய ஆணையை  பிறப்பிப்பதற்கு பிரதமர் மோடி உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் மத்திய பாஜகவுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பல்வேறு உத்திகளை கையாண்டு இந்தி பேசாத மக்கள் மீது திணிப்பதற்கு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் மத்திய அரசின் ஆயுஸ் அமைச்சகத்தின் சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கு மூன்று நாள் இணையவழி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் இந்தியா முழுவதும் 400 க்கும் மேற்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆயுஸ் அமைச்சகத்தின் அதிகாரிகள் அனைவரும் இந்தியிலேயே உரையாற்றியதால், எங்களுக்கு இந்தி புரியவில்லை ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள் என்று கூறிய தமிழக மருத்துவர்களை, இங்கு தெரியவில்லை என்றால் கூட்டத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறி அவமதித்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

மத்திய அரசு ஏற்பாடு செய்த இணையவழி கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து 38 பேர்களுக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த வகுப்புகளில் பேசிய அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலத்தை புறக்கணித்து பிடிவாதமாக இந்தியில் மட்டும் பேசினார்கள். ஆயுஸ் அமைச்சக செயலாளர் ராஜேஷ்  கொடேச்சா பிடிவாதமாக இந்தியில் மட்டுமே பேசினார்கள் ஆயுஸ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேச்சா இந்தியில் பேசிய போது தமிழகத்தை சேர்ந்த இயற்கை மருத்துவர் ஒருவர் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு ராஜேஷ் கொடேச்சா இந்தியாவின் ஆட்சி  மொழியான இந்தியில் தான் பேசுவேன், ஆங்கிலத்தில் பேச மாட்டேன். ஹிந்தி தெரியாதவர்கள் இந்த பயிற்சி வகுப்பை விட்டு வெளியேறுங்கள் என்று ஆணவமாக, உரத்த குரலில் கூறினார்.

அதே போல அனைவரும் இயற்கை மருத்துவத்தை தவிர்த்து விட்டு, யோகாவைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் ஒருவர் யோகாவும், இயற்கை மருத்துவமும், ஒரே பிரிவில் தானே வருகின்றன. நீங்கள் ஏன் பிரித்து சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த மருத்துவரை பயிற்சியை விட்டு வெளியில் போ என்று அந்த அதிகாரி மிரட்டல் விடுத்தார். 

இந்தி தெரியாத மருத்துவர்கள் இந்த பயிற்சி வகுப்புக்கு தேவையில்லை என்று அணுகுமுறையில் தான் ஆய்வுச் அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகளின் செயல்பாடுகள் அனைத்தும் இருந்தன. புதிய கல்விக் கொள்கையில் இந்தி, சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சி நடைபெற்று வருகிறது. அதேபோல சூழலியல் மதிப்பீட்டு அறிக்கையை இந்தி ஆங்கிலம் தவிர அரசமைப்புச் சட்டத்தின் அட்டவணையில் உள்ள, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்பை பெறுவதற்கு நீதிமன்றத்தில் போராடவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. எந்த வகையிலாவது ஆர்.எஸ்.எஸ், ஜனசங்கம், பாஜக, கொள்கையாக உள்ள இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை திணிப்பதில் தீவிரமாக மத்திய அரசு இருக்கிறது. இது இந்தி பேசாத மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆயுஸ் அமைச்சகத்தின் இணையவழி கருத்தரங்கில், தமிழகத்திலிருந்து 38 அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் தங்கள் கருத்துக்களை ஆங்கிலத்தில் தெரிவிக்க வாய்ப்பு மறுக்கப் பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் ஆங்கில மொழி அறிந்திருந்தாலும், இந்தியில் மட்டும் தான் பேசுவோம் என்று பிடிவாதம் காட்டியது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்தி பேசாத மக்களுக்கு ஆங்கிலத்தின் மூலம் தான் தொடர்பு கொள்ள வேண்டுமென்று ஆட்சிமொழி சட்டத்திருத்தம் கூறுகிறது. 

இதன்மூலம் பண்டித நேரு ஆகஸ்ட் 1959 மற்றும் ஆகஸ்ட் 1960களில் நாடாளுமன்றத்தில் இந்தி பேசாத மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியும், பிறகு பிரதமர் இந்திராகாந்தி ஆட்சிமொழி சட்டத்தில் 1967இல் திருத்தம் கொண்டுவந்து சட்டப் பாதுகாப்பு வழங்கினார். அத்தகைய சட்டப் பாதுகாப்பை பெறுகிற வகையில் மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுஸ் அமைச்சக அதிகாரிகள் இந்தி மொழியை, இந்தி பேசாத மக்களிடம் திணித்திருக்கின்றனர். இத்தகைய போக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக மத்திய பாஜக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு தீர்வு காணுகின்ற வகையில், இத்தகைய மத்திய அரசின் கூட்டங்களில் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் பயன்படுத்துகிற வகையில் உரிய ஆணையைப் பிறப்பித்து, அதற்கு பிரதமர் மோடி உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்படி முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனில், இந்தி பேசாத மக்களுக்கு பண்டித நேரு வழங்கிய உறுதிமொழியை பாதுகாக்கும் வகையில் தீவிரமான போராட்டத்தை மத்திய பாஜக அரசுக்கு எதிராக நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!