
தனக்கும், திவாகரனுக்கும் இடையே சமரசம் செய்ததாக நடராஜன் கூறுவது தவறு என்றும் அவர் ஒன்றும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அல்ல என்றும் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.விதினகரன் தெரிவித்துள்ளார்.
டி.டி.வி.தினகரனுக்கும் அவரது உறவினர் திவாகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தான் சமரசம் செய்து வைத்தாக சசிகலாவின் கணவர் நடராஜன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் 6-வது முறை சந்தித்தும் பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், பிரிந்து கிடக்கும் இரு அணிகளையும் நிச்சயம் இணைக்க முடியும் என்றும், இரு அணிகளையும் எவ்வாறு இணைப்பது என்பது குறித்து சசிகலா ஆலோசனை வழங்கினார் என்றும் தெரிவித்தார்.
வரும் ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு பிறகு மீண்டும் கட்சி பணிகளை தொடங்கப்போவதாகவும், அணிகள் இணைப்புக்காக 60 நாட்கள் விலகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஏதோ சில பயத்தின் காரணமாக அமைச்சர் ஜெயக்குமார் தனக்கு எதிராக பேசி வருகிறார் என கூறிய டி.டி.வி.தினகரன் அந்த பயம் தெளிந்து அவர் என்னுடன் பணியாற்றும் சூழல் வரும் என்றும் தெரிவித்தார்.
எனக்கும், திவாகரனுக்கும் இடையே சமரசம் செய்து வைத்தாக நடராஜன் கூறுவது தவறானது என்றும் அவர் ஒன்றும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அல்ல என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.