நீங்களும் வேணாம்.. உங்க காரும் வேணாம்... கெத்து காட்டிய இன்னோவா சம்பத்

First Published Jan 17, 2018, 4:35 PM IST
Highlights
nanjil sampath returns partys car to admk office today


அதிமுக., சார்பில் ஜெயலலிதாவால் தனக்கு வழங்கப்பட்ட இன்னோவா காரை அதிமுக., அலுவலகத்தில் தனது வழக்கறிஞர் காசிநாத பாரதி மூலம் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்.

முன்னதாக, டிடிவி தினகரன் தலைமையை ஏற்ற நாஞ்சில் சம்பத்துக்கு, கட்சிப் பணிகளை கவனிக்க அதிமுக., அளித்த இன்னோவா காரை, கட்சி திரும்பக் கேட்டதால் அதிமுகவிடமே காரை ஒப்படைக்க முடிவு செய்தார் நாஞ்சில் சம்பத். 

2012ஆம் ஆண்டில் மதிமுக.,வில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார் நாஞ்சில் சம்பத். அப்போது அவருக்கு கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியும், கூடவே கட்சிப் பணிகளுக்காக வெளியிடங்களுக்குச் செல்வதற்கு இன்னோவா கார் ஒன்றையும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதை அடுத்து, அவரை இன்னோவா சம்பத் என்று பட்டப் பெயரிட்டு எதிர்க்கட்சியினரும் சமூகவலைத்தளங்களில் பலரும் விமர்சித்தனர். 

இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா தலைமையை முதலில் சம்பத் ஏற்கவில்லை. அப்போது,  கட்சியில் இருந்து விலகப் போவதாகவும் ஜெயலலிதா அளித்த காரை கட்சியிடம் ஒப்படைக்கப் போவதாகவும் கூறினார் நாஞ்சில் சம்பத். 

ஜெயலலிதா தனக்கு வழங்கிய இன்னோவா காரை கடந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி காலை அதிமுக., தலைமைக் அலுவலகத்தில் விட்டுச் சென்றார் நாஞ்சில் சம்பத்.  இது குறித்து அவர் தனது முகநூலில் தெரிவித்த போது, "2012ம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இயக்க பிரச்சாரத்திற்காக கழகத்தின் பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட கார் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அம்மா அவர்கள் சாவியை என்னிடத்தில் ஒப்படைத்தார்கள். அந்த காரை கட்சியின் பிரச்சாரத்தைத் தவிர என்னுடைய சொந்த உபயோகத்திற்காக ஒரு நாள் கூட பயன்படுத்தவில்லை. பிரச்சாரம் இல்லாத நாட்களில் என்னுடைய நண்பர் ஜாபர் அலி வீட்டில் பாதுகாப்பாக நிற்கும். இப்போது 8 மாத காலமாக பிரச்சாரம் இல்லை. வீணாக அதை வைத்துக் கொண்டு இன்னோவா சம்பத் என பழியும் சுமந்து கொண்டு எதற்காக இருக்க வேண்டும் என்று எண்ணி இன்று காலை தலைமைக் கழகத்தில் ஒப்படைத்துவிட்டேன்" என்று முகநூலில் பதிவிட்டிருந்தார்.  
இருப்பினும், என்ன காரணமோ, மறுநாளே  சசிகலாவை சந்தித்து அவருக்கு தனது ஆதரவை அளித்தார். மேலும்,அந்த இன்னோவா காரையும் ஒப்படைக்காமல் தானே வைத்துக் கொண்டார்.  

இந்நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் கை ஓங்கி, டிடிவி தினகரன் தனித்து விடப் பட்டுள்ள நிலையில், தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்திடம் உள்ள இன்னோவா காரை திரும்ப ஒப்படைக்குமாறு  அதிமுக., கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, இன்று அந்தக் காரை அதிமுக., தலைமையிடம் மீண்டும்  ஒப்படைக்க நாஞ்சில் சம்பத் முடிவெடுத்து, இன்று காரை ஒப்படைத்துள்ளார். 

click me!