
அரசியல் களம் காண வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன், நிலவும் சூழலைக் கண்டு நடையைக் கட்டிவிடாமல், உறுதியாக வரும் பிப்ரவரி 21ம் தேதி கட்சிப் பெயரை அறிவித்து, உடனே சுற்றுப் பயணத்தையும் தொடங்குகிறாராம்!
நடிகர் கமல்ஹாசன் தான் அரசியலுக்கு வருவது குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார்.மேலும் தனது அரசியல் விமர்சனங்களையும் அவ்வப்போது டிவிட்டரில் வெளியிட்டு வருகிறார்.
கமல் வரும் பிப்ரவரி மாத மத்தியில் அரசியல் கட்சிப் பெயரை அறிவித்து தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி 21ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவித்து, தனது அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல் சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், வளர்த்தெடுத்த சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருப்பதால் மக்களை சந்திக்கும் பயணத்தை தான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து தொடங்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் கமல்.
கமல்ஹாசன் மேற்கொள்ள உள்ள முதற்கட்ட சுற்றுப் பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த சந்திப்பு புரட்சி முழக்கமாகவோ, கவர்ச்சிக் கழகமாகவோ இல்லாமல், தனக்கான புரிதல், கல்வியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
பிப்ரவரி 21ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக கூறியுள்ள கமல்ஹாசன், இது என் நாடு இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் தமக்கு மாத்திரம் இருந்தால் போதாது என்றும், தலைவன் வழிநடத்த மட்டுமல்லாமல், பின்பற்றுவதிலும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆக, ரஜினியுடன் அடுத்த சுற்று போட்டிக்கு கமலும் களம் காணத் தயாராகிவிட்டார். பல கட்சிகள் இருக்கும் தமிழகத்தில் மேலும் இரு கட்சிகள் பட்டியலில் இணையவுள்ளன என்பது மட்டும் உண்மை.