5 ஜி அலைக்கற்றை மட்டுமல்ல நாட்டையே அம்பானி,அதானிக்கு பாஜக அரசு விற்றுக்கொண்டிருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
5ஜி ஏலத்தில் மோசடி
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு நடைபெற்றதாகவும், தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததன் காரணமாக மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து தற்போது 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் 5ஜி அலைக்கற்றை 5முதல்6 லட்சம் கோடிக்கு விற்பனை ஆகும் என மத்திய அமைச்சர் தெரிவித்து இருந்தார். ஆனால் 1.50 லட்சம் கோடி மட்டுமே ஏலம் போனதாக கூறப்பட்டது. இதனை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விமர்சித்துள்ளார்.
நாட்டையே மோடி விற்கிறார்-சீமான்
51 ஜிகா ஹெட்ஸ் கொண்ட 5ஜி அலைக்கற்றை குறைவான தொகைக்கு விற்கப்பட்டு மிக பெரிய மோசடி நடந்துள்ளது. இது யாருக்காக செய்யப்பட்டது? எவ்வளவு மோசடி நடந்துள்ளது ? என இந்த அரசு விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் இப்போதைய அரசு தூக்கி எறியப்பட்டு புதிய அரசு அமைந்தவுடன் அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என கூறினார். இந்தநிலையில் அலைக்கற்றை ஏலம் தொடர்பாக கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அலைக்கற்றையை மட்டுமல்ல நாட்டையே அதானி அம்பானிக்கு மோடி விற்பனை செய்து விடுகின்றனர். மோடி டீ விற்றார் என்று சொல்வதை நம்பும் மக்கள், மோடி நாட்டை விற்கிறார் என்று சொல்வதை நம்புவதில்லை என வேதனை தெரிவித்தார்.
நாடே தனியார் மயமாகிவிட்டது
5 மாநில தேர்தல் வரவில்லை என்றால் பெட்ரோல் விலையை குறைத்து இருக்க மாட்டார்கள். அனைத்திற்கும் விலை உயர்த்தி உள்ளதாக விமர்சித்தார். ஜிஎஸ்டியை ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு திருப்பி கொடுக்கிறோம் என்று சொல்கிறீர்கள். எதற்கு இங்கிருந்து வாங்குகிறீர்கள், அப்புறம் எதற்கு நீங்கள் திரும்ப கொடுக்கிறீர்கள்? மத்திய அரசு தனக்கென நிதி வருவாயை பெருக்கிக் கொள்வதற்கு ஏதாவது வைத்துள்ளதா? என்று கேள்வி எழுப்பியவர் எல்லாமே தனியார் மயமாகி விட்டதாக குற்றம்சாட்டினார். மத்திய அரசுக்கு என்று தனியாக நிதி உள்ளதா? மாநிலங்களின் வரி வருவாயை வாங்கித் தான் மத்திய அரசு நிதி பெறுகிறது என தெரிவித்தார். சொந்த நாட்டு மக்களையே நம்பாதவர்கள் நீங்கள். ஆதாரை நான் இணைத்து விட்டேன். நாட்டின் முதன்மை குடிமக்களான பிரதமரும், அமைச்சர் அமித்ஷாவும் ஆதாரை இணைத்து காட்டுவார்களா? என சவால் விடுத்தார்.
இதையும் படியுங்கள்