தைரியம் இருந்தால் நேருக்கு நேராக அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும்.! ஆளுநர் பதவிக்குள் பதுங்க கூடாது- முரசொலி

By Ajmal KhanFirst Published Jun 8, 2023, 8:48 AM IST
Highlights

ஆளுநர் பதவிக்குள் பதுங்கிக் கொண்டு அரசியல் செய்ய முனையக் கூடாது. ஜாகையை கமலாலயத்திற்கு மாற்றிக் கொண்டு களத்துக்கு வரட்டும். அப்போது முழுமையாக வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை என முரசொலி விமர்சித்துள்ளது. 

அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும்

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்ற முதலமைச்சர் பயணத்தை விமர்சிக்கும் வகையில் தமிகழ ஆளுநர் ரவி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவின் நாளேடான முரசொலியில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேராக அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும். அதைவிட்டு ஆளுநர் பதவிக்குள் பதுங்கிக் கொண்டு அரசியல் செய்ய முனையக் கூடாது.

ஜாகையை கமலாலயத்திற்கு மாற்றிக் கொண்டு களத்துக்கு வரட்டும். அப்போது முழுமையாக வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை! ஒரு நியமனப் பதவியில் உட்கார்ந்து கொண்டு தினமும் அவர் செய்து கொண்டு வரும் குடைச்சல்கள் சகிக்க முடியாதவையாக இருக்கின்றன. அவர் ஏதோ இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரைப் போலவோ அல்லது இந்திய மன்னரைப் போலவோ மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார். 

மற்ற மாநில விழாக்களை தமிழ்நாட்டில் கொண்டாடுவாராம்

தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு தமிழகத்திற்கு எதிராக அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மற்ற மாநில விழாக்களை இங்கே உட்கார்ந்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார். மற்ற மாநிலங்கள் உருவான தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாடு” என்று சொல்லக் கூடாதாம். ஆனால் மற்ற மாநில விழாக்களை தமிழ்நாட்டில் கொண்டாடுவாராம், "மாநிலங்களே எதற்காக?' என்று கேட்பாராம். ஆனால் வாராவாரம் மாநில விழாக்களைக் கொண்டாடுவாராம். 'மாநிலங்களே இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைக்கிற தாம்'. ஆனால் அவர் மட்டும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருந்து கொண்டு அதிகாரத்தை அனுபவிப்பாராம். எத்தகைய ஏமாற்று இது? புதிய கல்விக் கொள்கையை வலியுறுத்தும் வகையில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தப் போவதாக ஆளுநர் சொன்னார். 

ஆளுநர். துணைவேந்தர்களிடம் என்ன பேச வேண்டும்

இணைவேந்தரான எனக்கே தெரிவிக்காமல் துணைவேந்தர்கள் கூட்டத்தை எப்படி நடத்தலாம்? என்று உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் பொன்முடி கேட்டார். உடனே பதுங்கினார் ஆளுநர். பல்கலைக் கழகத் துணைவேந்தர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதைப் பற்றி பேசி இருக்கிறார் ஆளுநர். துணைவேந்தர்களிடம் என்ன பேச வேண்டும். தொழிலதிபர்களிடம் என்ன பேச வேண்டும் என்ற அடிப்படை கூடவா தெரியவில்லை? நாம் வேண்டுகோள் விடுப்பதாலோ அல்லது அவர்களது நாடுகளுக்குச் சென்று பேசுவதாலோ மட்டும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன் வரமாட்டார்கள். முதலீடு செய்வதற்கேற்ற சூழலும் திறன்பெற்ற மனித ஆற்றலும் இருந்தால்தான் முதலீட்டாளர்கள் முன் வருவார்கள்' என்று தனது பொறாமைக் குணத்தை வார்த்தைகளால் முணுமுணுக்கிறார் ஆளுநர். முதலீட்டுச் சூழலும் திறன் பெற்ற மனித ஆற்றலும் இங்கு இருப்பதால் தான் தமிழ்நாட்டை நோக்கி நிறுவனங்கள் வருகின்றன. 

குரோட்டன்ஸ் தொட்டி, தொட்டி தோப்பாகாது.

இந்தியாவில் யாரும் உருவாக்க முன் வராத காலத்தில் உலக ஐ.டி.நிறுவனங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருக்க டைடல் பார்க் கட்டியவர் கலைஞர். அதனால்தான் அவரது பெயரால் மிகப் பெரிய கன்வென்ஷன் சென்டர் உருவாக்க இருக்கிறார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.  இந்த மாநிலத்துக்கும், மாநில மக்க ளுக்கும் எதைச் செய்து தர வேண்டும் என்பது நிராவிட முன்னேற்றக் கழக அரசுக்குத் தெரியும். ஏனென்றால் தி.மு.க.என்பது தமிழ் மண்ணில் மலர்ந்து 75 ஆண்டுகளைக் கடந்து வளர்ந்து நிற்கும் - காலா காலத்துக்கு நிற்கும் ஆலமரம் ஆகும். ஆளுநர் பதவி என்பது ஒன்றியத் தலைமையால் தற்காலிகமாக கொண்டு வந்து வைக்கப்படும் குரோட்டன்ஸ் தொட்டி, தொட்டி தோப்பாகாது. எனவே, வெட்டிப் பேச்சுகளை விடுக்க ஆளுநரைக் கேட்டுக் கொள்வதாக முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

கொலை நடக்காத நாட்களே இல்லை.!சர்வாதிகார ஆட்சியால் தமிழகம் தலை குனிந்து உள்ளது-திமுகவை விளாசிய ஆர்.பி. உதயகுமார்

click me!