திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகிய மூவரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
T.Balamurukan
திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகிய மூவரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்களுக்கான ஆறு இடங்கள் காலியாகியுள்ளன என்ற நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடைப்படையில், திமுக கூட்டணிக்கு மூன்று இடங்களும், அதிமுக கூட்டணிக்கு மூன்று இடங்கள் கிடைக்கும்.வரும் மார்ச் 6ம் தேதி வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யவேண்டி இருக்கிறது. திமுக தனது மூன்று வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்திருக்கிறது.திமுகவின் மாநிலங்களவைப் பதவிகளில், கூட்டணி கட்சியினருக்கு இடம் ஒதுக்கப்படலாம் என்று பேச்சுக்கள் முனுமுனுத்த நிலையில், மூன்று இடங்களையும் திமுக தனது கட்சியினருக்கே ஒதுக்கியுள்ளது.
திருச்சி சிவா, 1978ல் திமுகவின் மாணவரணி ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டவர். தற்போதுவரை மாநிலங்களவை உறுப்பினர். திருநங்கைகள் உரிமைக்காக அவர் கொண்டுவந்த தனிநபர் மசோதா பெரும் வரவேற்பைப் பெற்றது. மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். ஒருமுறை மக்களவை உறுப்பினராக இருந்தவர். இலக்கியவாதி. திமுகவின் முன்னணி பேச்சாளர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அந்தியூர் செல்வராஜ் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். மேற்கு மாவட்டங்களில் திமுகவின் பலத்தை அதிகரிக்க அந்தியூர் செல்வராஜுக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கைத்தறி துறை அமைச்சராக இருந்தவர். 1996ல் கலைஞரின் ஆயுள் அதிகரிக்கவேண்டி, தீ மிதித் திருவிழாவில் பங்கேற்றதால் விமர்சனத்திற்கு ஆளானவர்.
திமுகவின் முக்கிய வழக்குகளை கையாண்ட வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ. குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி உடலை கடற்கரையில் அடக்கம் செய்வது தொடர்பான வழக்கில் திமுக பெற்ற வெற்றியில் பி.வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோவின் பங்கு இருந்தது. வில்சன் 2019ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார்.அடுத்த வாய்ப்பு இளங்கோவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.