வருமான வரித்துறையின் 5 நாள் கிடுக்குப்பிடி சோதனைகளுக்கு பிறகு இன்று ஜாஸ் சினிமாஸில் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.
சசிகலா குடும்பத்தினர் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் 5 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.
இந்த சோதனையை 200 கார்களில் வந்த 1800 அதிகாரிகள் 187 இடங்களில் மேற்கொண்டனர். அதில் சில இடங்களில் நேற்று முன்தினமே சோதனை நிறைவு பெற்றது. இதனிடையே சசிகலா உறவினர்கள் 150 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சோதனையின்போது சிக்கிய ஆவணங்கள், பொருட்கள், சொத்துக்கள் மதிப்பு பற்றி வருமான வரித்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் 2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள், ஏராளமான நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், விவேக்கிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், ரூ.1000 கோடி மதிப்புள்ள ‘ஜாஸ் சினிமா’ தியேட்டர்களை வாங்கியது எப்படி? என வருமானவரித்துறை அதிகாரிகள் விவேக்கை துருவி வருகின்றனர்.
வேளச்சேரி ஜாஸ் சினிமாஸில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதால் அங்கு திரையரங்கு காட்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதைதொடர்ந்து இன்றுடன் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
இந்நிலையில், 5 நாட்களுக்கு பிறகு ஜாஸ் சினிமாஸில் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.