அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது எனவும், டிடிவி அணியில் இருந்து 12 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அணிக்கு வந்து விட்டதாகவும் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நாள் முதலே ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என ஒபிஎஸ் முழக்கமிட்டு வருகிறார்.
அதனால் நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் ஜெ வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதன்படி சென்னையில் இன்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தினார். இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து ஜெ சமாதியில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. காரணம் பிரிந்த இடத்திலேயே ஒன்று சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைதொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்களும் அதிமுக தொண்டர்களும் மெரினாவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது எனவும், டிடிவி அணியில் இருந்து 12 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அணிக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
தற்போது டிடிவி தரப்பில் 5 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளதாகவும், இரு அணிகளும் இணைவது தான் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் விருப்பம் எனவும் தெரிவித்தார்.