நடிகர் ரஜினிகாந்த், கடந்த 5 நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
முதல் நாள் தொடக்க விழாவில் பேசிய ரஜினி, தன்னை அரசியல் ஆதாயத்துக்காக பல கட்சிகள் இழுப்பதாக தெரிவித்தார். மேலும், “நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருக்கிறது” என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால், தமிழக அரசியலில் பெரும் சர்ச்சை கிளம்பியது. மேலும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக அன்புமணி ஆகியோர் சிறந்த நிர்வாகிகள் என கூறினார். இதனால், பாஜகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பாஜக தலைவர்கள் ரஜினி குறித்து பல்வேறு கருத்துகளை பத்திரிகைகளில் வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வளைதளங்களில் பல்வேறு பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், நான் ரஜினி ரசிகன்... அவர் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என மயிலாப்பூர் அதிமுக எம்எல்ஏ நட்ராஜ், செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து எம்எல்ஏ நட்ராஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. மக்கள் விரும்பினால், அவர் தாராளமான வரட்டும். இது ஜனநாயக நாடு. எல்லோருக்கும் உரிமை உள்ளது. அவர் அரசியலுக்கு வருவதில், மக்களின் விருப்பமே முக்கியம். நானும், ரஜினியின் ரசிகன் என்பதில் எனக்கு சந்தோஷம்தான்...
டாஸ்மாக் கடைகள் திறக்க கூடாது என பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால், போலீசார் அத்துமீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது தடியடி நடத்துவது தவறான செயல். குறிப்பாக பெண்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.