
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, மைத்தேரயன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் சகிதம் சந்தித்த ஓ.பி.எஸ். மோடியிடம் மனம் விட்டே பேசியிருக்கிறார். அவரும் சில ரகசியங்களை காதில் சொல்ல புன்முகத்துடனே பிரதமர் அலுவலகத்தில் இருந்து பன்னீர்செல்வம் வெளியே வந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை தனது மடிக்கணினியைத் திறந்த ஓ.பி.எஸ். டுவிட்டிய ஒரு பதிவு, அவரின் டெல்லி பயணத்திற்கான காரணத்தை பட்டவர்த்தனமாக வெளிக்காட்டி விட்டது.
உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்று முதல் பதிவை வெளியிட்டார்.
ஆனால் இந்தப் பதிவு தொலைக்காட்சிகளில் தீயாகப் பரவ, தட்டச்சு செய்யும் டி.டி.பி. ஆபரேட்டரை விட படுவேகமாக எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று மற்றொரு பதிவிட்டு ஜகா வாங்கினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த டுவிட்டுகளை திமுக எம்.பி. கனிமொழி முன்பே கணித்திருப்போர் போல... பன்னீர்செல்வத்தின் எண்ணப்பாங்கை ஸ்கிரீன்ஷாட் எடுத்தது போல விருதுநகரில் அச்சுபிசறாமல் டெல்லி பயணத்திற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார்.
கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "பதவியை தக்க வைக்க, பதவிக்கு வரவே சிலர் டெல்லிக்கு படையெடுக்கின்றனர் என்று பன்னீர்செல்வத்தை மறைமுகமாகச் சாடியுள்ளார்.
தேர்தல் வந்தால் யார் கனவு காண்கிறார்கள், யார் முதல்வர் ஆகிறார் என்பது தெரியும் என்று குறிப்பிட்ட கனிமொழி, ஓ.பன்னீர்செல்வத்தின் முதல்வர் கனவு கலைந்ததற்கு திமுகவால் என்ன செய்ய முடியும்" என்று போடு போட்டார்.