
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தவுடன், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக அறிவிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டார். இந்த செய்தி, அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
இதனால், பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும் சந்தோஷம் அடைந்தனர். இந்த நேரத்தில், திடீரென மனம் மாறிய ஓ.பன்னீர்செல்வம், எந்த கட்சியுடன் கூட்டணி என்பது பற்றி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் அரை மணிநேர மன மாற்றத்தை கண்டு பாஜகவினர் மட்டுமின்றி, அதிமுகவினரும் அதிச்சயடைந்துள்ளனர்.
இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், தற்போது அதிமுகவை பொறுத்தவரையில் கட்சியின் சின்னமான இரட்டை இலையை மீட்பதில் குறியாக உள்ளனர். இதற்காக ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசை நாடியுள்ளார்.
ஏற்கனவே ஓ.பி.எஸ். அமைதியான மனிதர். யார் என்ன சொன்னாலும், உடனே பதில் கூறமாட்டார். பொறுமையாக இருந்து, அதற்கான பதில் கூறுவார். ஜெயலலிதாவுக்கு பின், அவரால் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியும் என ஏற்கனவே பாஜகவினர் கூறினர்.
இதனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு, பாஜகவின் முழு ஆதரவு இருந்து வருகிறது. இதற்கிடையில், மோடியுடன் அவர் சந்தித்து பேசியபோது, “டீலா நோ டீலா” என் பேச்சு வார்த்தை நடந்துள்ளது.
“அதில் கட்சியும், சின்னமும் உனக்கு. தமிழகத்தில் ஆட்சி எங்களுக்கு” என பாஜகவினர் கூறியதாக தெரிகிறது. இதற்கு உடனே பதில் கூற முடியாத ஓ.பி.எஸ். ஆலோசனை செய்து பதிலளிப்பதாக கூறியுள்ளார்.
அதன்படி தனது அணியினருடன் பேசி, டுவிட்டர் பக்கத்தில், உள்ளாட்சி தேர்தல் அறிவித்தவுடன் பாஜகவுடன் கூட்டணி என அறிவித்தார். பின்னர், அரை மணிநேரத்தில் தனது முடிவை மாற்றி, கூட்டணி குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என கூறியுள்ளார் என்றனர்.
அரை மணி நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் தனது முடிவை மாற்றியதால், அவரை ஆட்சியில் அமர வைத்தால், அப்போது என்ன முடிவு செய்வாரோ என அதிமுகவினரே புலம்புகின்றனர்.