
கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, பேசியதாவது:-
திமுகவில் இருந்து வெளியேறி, அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினார். அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. எம்ஜிஆரின் வாரிசு ஜெயலலிதா மட்டுமே. அவரது வாரிசாக தொண்டர்கள் மட்டுமே உள்ளனர். வேறு யாரும், இதில் உரிமை கொண்டாட முடியாது.
அதிமுகவில் இருந்து சிலர், வழிமாறி சென்று விட்டனர். அவர்கள் மீண்டும் நல் வழிக்கு திரும்பி வரவேண்டும். அப்போதுதான், அதிமுகவின் பலம் அவர்களுக்கும், மற்ற கட்சியினருக்கும் தெரியும்.
ஜெயலலிதா விட்டு சென்ற பணிகள் இதுவரை ஒன்று கூட நிறுத்தவில்லை. அனைத்தும் சரியான முறையில் நடந்து வருகிறது. அவர் விட்டு சென்ற பணிகள் அனைத்தும், விரைவில் நிறைவேற்றப்படும். அந்த பணிகள் அனைத்தையும் தமிழக அரசு மேற்கொண்டு செய்து முடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுகவில் வாரிசு யாரும் இல்லை என்றும், அதிமுகவில் இருந்து வழிமாறி சென்றவர்கள், மீண்டும் நல்வழியில் திரும்ப வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டது, ஓ.பி.எஸ். அணியினருடன் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. இதனால், இரு அணியினரின் பேச்சு வார்த்தை விரைவில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.