மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில், மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 8ம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றி கொள்ளலாம் என தெரிவித்தது. இதையொட்டி பொதுமக்கள் தினம் தினம் பணத்துக்காக கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் கடந்த 2 நாட்களாக வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், ஏடிஎம் மையங்களிலும் பணம் இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். மத்திய அரசின் திடீர் பணம் தடைக்கு, அனைத்து கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து, இன்று திமுக உள்பட அனைத்து கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைதொடர்ந்து சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி அருகே சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான திமுகவினர்கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.