கொரோனாவால் மிகக் கடுமையாக பாதித்துள்ளது மாநில பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
கொரோனாவால் மிகக் கடுமையாக பாதித்துள்ளது மாநில பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த 46 மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது, இந்த ஆலோசனையில் மாநில முதல்வர்களும் பங்கேற்கலாம் என கூறப்பட்டிருந்தது, அதன் அடிப்படையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பாதிப்பு அதிகமாக மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டதை தமிழக அரசு புறக்கணிப்பு செய்திருந்தது. காரணம் அதிகாரிகள் மட்டுமல்லாது, கருத்துகளை தெரிவிக்க அமைச்சரையும் ஆலோசனையில் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைத்தும் எவ்வித பதிலையும் மத்திய அரசு தெரிவிக்காத காரணத்தால் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்ததாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இந்த சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அதன்படி பிரதமர் மோடியுடனான ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று காணொளி மூலம் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து தலைமைச்செயலாளர் இறையன்பு, பொதுத்துறைச்செயலாளர் ஜகந்நாதன், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் கர்நாடகா, பீஹார், அஸ்ஸாம், சண்டிகர், உத்தராகண்ட், மத்தியபிரதேசம், கோவா, இமாச்சல பிரதேசம், டில்லி ஆகிய மாநிலங்களின் உயர் அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.