50 ஆண்டுகளாக உழைத்து முதல்வரானவர் மு.க.ஸ்டாலின்.. தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி அடடே பேச்சு..!

By Asianet TamilFirst Published Oct 2, 2021, 8:18 PM IST
Highlights

கடந்த அரை நூற்றாண்டு காலமாக உழைத்துதான் ஸ்டாலின் முதல்வர் கனவை நனவாக்கினார் என்று ராணிப்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பாமக இளைஞரணி தலைவர்  அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
 

உள்ளாட்சித் தேர்தலில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். “தமிழகத்தில் மாற்றத்தை நாம் கொண்டு வருவோம். ஜனநாயகத்தின் அடித்தளமானது உள்ளாட்சி தேர்தல்தான். நாடாளுமன்றம், சட்டப்பேரவை தேர்தலைவிட வலிமையானது உள்ளாட்சிகள்.. ஆக, இந்த உள்ளாட்சி தேர்தலில் நல்லவர்களையும் வலிமையானவர்களையும் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் ஒரு கட்சியோடு கூட்டணியில் இருந்தோம். அவர்கள் 25 இடங்களில் இரண்டு இடங்கள் மட்டுமே கொடுத்தார்கள். அங்கும் போட்டி வேட்பாளர்களை நிறுத்தினார்கள். அதனால்தான் நாம் தற்போது தனித்து போட்டியிடுகிறோம். கடந்த அரை நூற்றாண்டு காலமாக உழைத்துதான் ஸ்டாலின் முதல்வர் கனவை நனவாக்கினார். அதைப்போல, பாமகவும் தனது கனவை நினைவாக்க பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.
மாநில சுயாட்சி கோரிக்கையை அண்ணா முன்வைத்தார். அது நியாயமான கோரிக்கை என்பதால்தான் பாமக அந்தக் கோரிக்கையை வரவேற்கிறது. மாநில பட்டியலில் கல்வி இருந்திருந்தால், இன்று நீட் தேர்வு என்ற பிரச்னையே வந்திருக்கிறது. நீட் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களுக்கும் சமூக நீதிக்கும் எதிரானது” என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
 

click me!