எம்எல்ஏ தேர்தலில் ஒரு சதவீத வித்தியாசத்தில்தான் தோற்றோம்.. இனி எப்போதும் அதிமுகதான்.. ஓபிஎஸ் தாறுமாறு.!

By Asianet TamilFirst Published Oct 2, 2021, 7:58 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தலில் பெறப்போகும் வெற்றியின் மூலம் இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 

உள்ளாட்சித் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு சதவீத வித்தியாசத்தில்தான் வெற்றியை இழந்தோம். சில பல காரணங்களால் தோல்வியைத் தழுவினோம். அந்த ஆதங்க உணர்வு தொண்டர்களிடம் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தமிழக மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எம்ஜிஆர் 1972-ஆம் ஆண்டு அதிமுகவை உருவாக்கி இன்று 50-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். அதிமுகவை அவர் தொடங்கியபோது எம்ஜிஆருக்கு கருணாநிதியால் பல்வேறு சோதனைகளும் பிரச்னைகளும் வந்தன. அவற்றையெல்லாம் முறியடித்துதான் 3 முறை யாராலும் வெல்ல முடியாத முதல்வராக எம்ஜிஆர் வந்தார்.
கட்சியை 16 லட்சம் தொண்டர்களுடன் எம்ஜிஆர் விட்டுச் சென்றார். அந்த இயக்கத்தை ஜெயலலிதா ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட எஃகு கோட்டையாக மாற்றி காட்டினார். 10 ஆண்டுகள் எம்ஜிஆர், 16 ஆண்டுகள் ஜெயலலிதா, 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி என மொத்தம் 30 ஆண்டுகள் தமிழகத்தில் அதிமுக சிறப்பான ஆட்சியை நடத்தியிருக்கிறது. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுகதான். இதே மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் துரைமுருகன் எம்ஜிஆரை பற்றி நா கூசாமல் அவதூறாகப் பேசியிருக்கிறார். அவருக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். அண்ணா, எம்ஜிஆரை என் இதயக்கனி என சொன்னாரே, அவர் நம்பிக்கை துரோகியா? 
1967-ஆம் ஆண்டில் அண்ணா மகத்தான வெற்றிபெற்று முதல்வரானதும், ‘இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த ராமச்சந்திரனுக்கு ராமாவரம் தோட்டத்துக்குச் சென்று நன்றி சொல்லுங்கள்’ என்று அண்ணா கூறினார். அவர், நம்பிக்கை துரோகியா? ஏன், துரைமுருகனை படிக்க உதவி செய்தாரே, அவர் நம்பிக்கை துரோகியா? தன்னுடைய படங்களின் மூலம் திமுக கொள்கைகளை பரப்பி, திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்த எம்ஜிஆர் நம்பிக்கை துரோகியா? அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதி முதல்வராக வரக் காரணமே எம்ஜிஆர். அவர் நம்பிக்கை துரோகியா? மேடையில் எல்லோரும் சிரிக்க வேண்டும் என்பதற்காக நா கூசாமல் பேசக்கூடாது. 
இப்போது நாம் பெறும் வெற்றி, அடுத்து எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். நாம் பெறப்போகும் வெற்றியின் மூலம் இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

click me!