மு.க.ஸ்டாலின் கூப்பிட்டுட்டாரு... ரெண்டு நாள் பொறுங்க... திடீரென ஜகா வாங்கிய திருமாவளவன்..!

By Thiraviaraj RMFirst Published Sep 29, 2021, 5:51 PM IST
Highlights

கொடி ஏற்றுவதற்கு போலீஸார் அனுமதி மறுத்ததை கண்டித்து விசிக தரப்பில் நடைபெற இருந்த போராட்டங்கள் இரண்டு நாட்கள் தள்ளி வைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  
 

கொடி ஏற்றுவதற்கு போலீஸார் அனுமதி மறுத்ததை கண்டித்து விசிக தரப்பில் நடைபெற இருந்த போராட்டங்கள் இரண்டு நாட்கள் தள்ளி வைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

சேலம் மாவட்டம், காடயம்பட்டி ஒன்றியம் மோரூர் கிராமத்தில் பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை வைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, காவல்துறையினரை கண்டிக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அடுத்தடுத்து இதனை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. காவல்துறையினரையும், தாங்கள் கூட்டணி வகிக்கும் திமுக ஆட்சியையும் கடுமையாக திருமாவளவன் விமர்சித்து வந்தார். காவல்துறை எங்களை ஒரு கட்சியாகவே மதிக்கவில்லை. நாங்கள் democracyயை எதிர்க்கவில்லை, bureaucracyயை எதிர்கிறோம். அதிமுக, திமுக யார் வந்தாலும் ஆள்வது அதிகாரிகள்தான். சமூகநீதி சமூகங்களாய் ஒன்றிணைந்து சனாதனத்தை வீழ்த்துவோம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை தலைவர் திருமாவளவன் சொன்னாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சாதிக்கட்சியாக கட்டம் கட்ட நினைக்கிறது சனாதனம். அத்தகைய, சனாதனத்திற்கு "சாதி இந்துக்களின் கட்சிகள்" துணைப்புரிகின்றன. திருமாவளவன் இல்லாமல் போகலாம். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் இல்லாமல் போகாது' என்று கொதித்து வந்தார். 

இதனால் திமுக-விசிக இடையே கூட்டணி முறிவு ஏற்படலாம் என்கிற பேச்சும் அரசியல் மட்டத்தில் எழுந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு ஆர்பாட்டத்தை தள்ளிவைப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பதிவில், “நேற்று சென்னையில் நமது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தரப்பு நம்மை தொடர்புகொண்டு, இரண்டு நாள் சுற்றுப் பயணத்துக்கு பின் முதல்வர் சென்னை திரும்பவிருக்கிறார். சென்னைக்கு வந்தபின் என்னை சந்தித்து பேச விரும்புவதாகவும், இதற்கிடையே போராட்டங்களை நிறுத்திவைக்கும்படியும் கேட்டுக்கொண்டனர்.

முதல்வரின் தரப்பு வேண்டுகோளை ஏற்று நாளை சேலத்தில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டமும், நாளை மறுநாள் மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமும் தள்ளிவைக்கப்படுகிறது. நம் மீது பொய் வழக்குகளை போட்டு நெருக்கடி கொடுக்கும் காவல்துறையினர் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறோம்.

முதல்வரிடம் பேசியபிறகு இதுகுறித்த நிலைப்பாட்டையும், முடிவையும் எடுக்கலாம். கூட்டணி உறவுக்கு நெருக்கடியோ, சிக்கலையோ ஏற்படுத்துவது நமது நோக்கமில்லை. காவல்துறையிலும் கறுப்பு ஆடுகள் இருக்கின்றனர். அவர்களை கண்டிப்பதும், நமது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதும் நமக்கான உரிமை”என்று தெரிவித்துள்ளார்.
 

click me!