
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமு பொது செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து கடந்த 15ம் தேதி மாலை சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சரணடைந்தனர். அங்கு சுதாகரன் தனி சிறையிலும், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் ஒரே அறையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், அதிமுக துணை பொது செயலாளர் தினகரன், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து, கட்சி மற்றும் ஆட்சி சம்பந்தமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசுவதற்காக தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் விமானம் மூலம் பெங்களூர் சென்றனர்.
சசிகலாவை சந்திக்கும்போது, டெல்லியில் பிரதமர் மோடியை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, ஏற்பட்ட அமளி குறித்து உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது உள்பட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பத்தாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்ற முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, பேச்சாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரை சிறை அதிகாரிகள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.