
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன் காரணமாக முதலமைச்சரின் இலாகாக்கள் நிதியமைச்சர் பன்னீர்செல்வத்திடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்படைத்து உத்தரவிட்டார். அதன்படி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. அதில் மழைகாலங்களில் எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காவிரி விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையடுத்து நாளை 2வது முறையாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காவிரி விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. காவிரி தொழில்நுட்பக்குழுவின் ஆய்வறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மனுவை தாக்கல் செய்வது பற்றி கூட்டத்தில் ஆலோதித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.