தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பராமரிப்பு பணிக்காக மின் தடை செய்யப்படாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பெருந்தோற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 7ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க கூட மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் 07.06.2021 வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருப்பதாலும், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதாலும், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் /தேர்வுகள் நடப்பதாலும், தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்புப் பணிகளுக்காகக் கொடுக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2020 முதல் ஆறு மாத காலமாக எந்தவித பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாததால், ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. தற்பொழுது மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்புப் பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், பராமரிப்புப் பணிகள் எவ்விதத் தொய்வுமின்றி விரைந்து எடுத்துக்கொள்ளப்படும் என, அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.