இந்தக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “பொதுவாக பாக முகவர்கள் கூட்டம் என்றால் அரங்கில்தான் நடைபெறும். ஆனால், தமிழகத்திலேயே இவ்வளவு பெரிய இடத்தில் நடந்தது இதுவே முதல் முறை.
கோவையில் பூத் ஏஜெண்ட் கூட்டத்தை மாநாடு போல நடத்திய அமைச்சர் செந்தில் பாலாஜியை புகழ்ந்து தள்ளினார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
கோவையில் திமுக சார்பில் பூத் ஏஜெண்ட் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. வழக்கமாக பூத் ஏஜெண்ட் கூட்டம் திருமண மண்டபம், உள் அரங்கில்தான் நடைபெறும். ஆனால், இந்த பூத் ஏஜெண்ட் கூட்டம் கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. திறந்த வெளியில் நடைபெற்ற பூத் ஏஜெண்ட் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்றனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் பூத் ஏஜெண்ட்கள் மட்டும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டது முதல், கோவையில் கவனத்தைக் குவித்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்றில்கூட திமுக கூட்டணி வெற்றி பெற முடியவில்லை. கோவையை அதிமுகவின் கோட்டையாக எஸ்.பி. வேலுமணி மாற்றி வைத்திருக்கிறார். அதைத் தகர்த்தெறிய வேண்டும் என்பதற்காகத்தான் செந்தில் பாலாஜி கோவையில் களமிறக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மக்கள் சந்திப்புக் கூட்டங்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் என நடத்திவந்த செந்தில்பாலாஜி, தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மிரண்டு போகும் அளவுக்கு பூத் ஏஜெண்ட் கூட்டத்தையே மாநாடு போல நடத்திக் காட்டியிருக்கிறார்.
இதுதொடர்பாக புகைப்படங்கள் வெளியாகத் தொடங்கியதுமே, அந்தப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் திமுக தொண்டர்கள் பதிவிட்டு, ‘இது பாக முகவர்கள் கூட்டமா, மாநாடா’ என்று மூக்கில் விரல் வைக்கும் அளவுக்குப் பதிவிட்டு வருகிறார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தபோதும், அதையும் தாண்டி ஒரு மாநாட்டை நடத்திக் காட்டியிருப்பதன் மூலம் கோவையில் செந்தில்பாலாஜி தன்னுடைய பலத்தை எதிர்க்கட்சிகளுக்குக் காட்டியிருப்பதாக உடன்பிறப்புகள் பெருமையில் இருக்கிறார்கள். இதைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலினும் குறிப்பிட்டுச் சொல்ல தவறவில்லை.
இந்தக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “பொதுவாக பாக முகவர்கள் கூட்டம் என்றால் அரங்கில்தான் நடைபெறும். ஆனால், தமிழகத்திலேயே இவ்வளவு பெரிய இடத்தில் நடந்தது இதுவே முதல் முறை. அண்ணன் செந்தில்பாலாஜி சொன்னதைப் போல, உங்களுக்கெல்லாம் ஒரு மினிட் புக் போட்டுக்கொடுத்திருக்கிறார். எனக்குத் தெரிந்து, தமிழ்நாட்டிலேயே முதன்முதலில், பாக முகவர்களுக்கு மினிட் புக் போட்டு கொடுத்தது இந்த கோவை மாவட்டமாகத்தான் இருக்கும். அதற்கு முக்கிய காரணமாக இருந்த செந்தில் பாலாஜியை பாராட்டியே ஆகவேண்டும். நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தவுடன், எனக்கு ஒரு சிறு குழப்பமே ஏற்பட்டது; நான் கோவைக்கு வந்திருக்கிறேனா? கரூருக்கு வந்திருக்கின்றேனா என்று. அந்த அளவிற்குஒரு மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இந்தநிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும்மீண்டும் நன்றி” என்று செந்தில்பாலாஜியைப் புகழ்ந்து தள்ளினார் உதயநிதி.