நெருப்புடன் விளையாடாதீர்கள்.. கருணாநிதியை முதல்வராக அடையாளம் காட்டியதே எம்ஜிஆர் தான்.. கொதிக்கும் ஜெயக்குமார்

By vinoth kumarFirst Published Oct 1, 2021, 2:06 PM IST
Highlights

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரையும் துரோகிகள் பட்டியலில் துரைமுருகன் வரிசைப்படுத்தியிருந்தார்.இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. 

எம்ஜிஆரை துரோகி என பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்;- தங்கள் இயக்கம் பல துரோகிகளை கடந்து வெற்றி கண்டது என்று கூறியிருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரையும் துரோகிகள் பட்டியலில் துரைமுருகன் வரிசைப்படுத்தியிருந்தார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார்;- நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்து, பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவித்து அவருடைய புகழுக்கு புகழ் சேர்த்தது அதிமுக அரசு தான். 

பேருந்து நிலையங்களில் அரசு விளம்பர படங்களை வைப்பதுதான் திமுக அரசு செய்த சாதனை என்றார். புரட்சித் தலைவரை சீண்டுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது. கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்தே இருக்காது. திமுக என்பது துரோகக் கும்பல் என்று ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்தார்.

click me!