
திருநெல்வேலியில் வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை வரவேற்க 25 கல்லூரி மாணவிகள், 25 வெள்ளை நிற இன்னோவா கார் மற்றும் 500 தனியார் பேருந்துகள் வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலியில் எம்.ஜி.ஆர்.,நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. தற்போது மழை காலம் என்பதால் திறந்தவெளி மேடை அமைக்காமல் ஆயிரக்கணக்கானோர் உட்காரும் வகையில் மேற்கூரையுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான செலவை அதிகாரிகள் தலையில் கட்டும் வேலை நடந்து வருவதால் அவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் பல லட்சம் ரூபாய் செலவில் தார்ச்சாலைகள், பிரமாண்டமான மேடை, மழைநீரை மோட்டாரை வைத்து உறிஞ்சும் பணிகள் ஜரூராக நடக்கிறது.
பெரிய கட்அவுட்கள் வைக்கும்போது அதில் உயிரோடு இருப்பவர்களின் படங்கள் இடம்பெறக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு நடக்கும் விழ இது. ஆனாலும் முதலமைச்சரை வரவேற்க நெல்லை மாநகரெங்கும் கட்அவுட்கள் வைப்பதற்காக சாலைகளின் ஓரங்களை தோண்டப்பட்டு வருகின்றன.
நெல்லையில் மழை பாதிப்பு, டெங்கு காய்ச்சல் என மாநகராட்சி, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குமிங்கும் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இந்த சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக தெண்டச்செலவுகளை செய்துவருகின்றனர் என குற்றச்ட்டு எழுந்துள்ளது.
யார் யாருக்கு என்னென்ன உத்தரவு ?
இதற்கு முன்பு நடைபெற்ற விழாக்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை விழாவிற்கு அழைத்துவரக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதால் தற்போது முதன்மை கல்வி அலுவலர் மூலம் பள்ளி தோறும் பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை போட்டி நடத்தி பரிசு வாங்க மாணவ, மாணவிகளை அள்ளிக்கொண்டு வாருங்கள் என உத்தரவிடப்பட்டடுள்ளது..
எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக ரோஜா மலர்களுடன் கல்லூரி மாணவியர்கள் 25 பேரை தேர்வு செய்யும் பொறுப்பு கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு தரப்பட்டுள்ளது.
எடப்பாடியும், ஓபிஎஸ்ம் அரசின் சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்கள். மற்றஅமைச்சர்கள், அதிகாரிகள் தங்க, நெல்லையில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்கள் ஒவ்வொன்றிலும் பத்து அறைகள் இப்போதே புக் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், விஐபிக்கள் வருகைக்காக ஒரே மாதிரி 25 இன்னொவா வெள்ளை நிற கார்கள் ஏற்பாடு செய்து வைக்குமாறு வட்டார போக்குவரத்துஅலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து வரும் வழியில் விழாவிற்கு வரும் கட்சியினர்.அமைச்சரின் சகாக்கள் என அனைவரின் வாகனங்களை எந்த சுங்கச்சாவடிகளிலும்பணம் வசூலிக்காமல் அனுப்புவதற்கான பொறுப்பு நெடுஞ்சாலைத்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கு மழை நேரம் என்பதால் கூட்டம் குறைவாக வந்தது என்ற அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காக எல்லா துறைகளில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் 15 தாசில்தார்களும் தங்கள் பகுதியில் தலா 500 பயனாளிகளை தேர்வு செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும். அவர்களை காலையில் வாகனங்களில் அழைத்துவந்து, மதியம் சாப்பாடு கொடுத்து, மாலையில் வீட்டுக்கு வாகனங்களில் ஒப்படைக்கும் வரையிலும் தாசில்தார்களின் கடமையாகும்.
விழாவை கவர் செய்ய வரும் பத்திரிகையாளர்களுக்கு சாப்பாடு, உள்ளிட்டவைகள் வழங்கி வனிக்கும் பொறுப்பு மாவட்ட டாஸ்மாக் மதுபான மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி, ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களின் ரத்தப்பிரிவுகளை அறிந்து அந்தந்த ரத்தங்களுடன் டாக்டர்கள் குழு மேடைக்கு அருகிலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், வந்துசெல்லும் வரையிலும் நெல்லையில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும், சுற்றுலா மாளிகையிலும் தரமான உணவு வழங்கப்படுகிறதா என கவனிக்கும் பொறுப்பு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதிலும் இருந்தும் மக்கள் விழாவிற்கு இலவசமாக வந்துசெல்ல அரசு பஸ்கள், தனியார் பள்ளி,கல்லூரிகளின் பஸ்களை பெற்று அந்தந்த பகுதிகளுக்கு அனுப்புவது வட்டார போக்குவரத்து அலுவலர்களின் பொறுப்பு.
இந்த விழாவிற்காக இதுவரையிலும் அதிகாரிகள் யாருக்கும் முன்பணம் வழங்கப்படவில்லை. எனவே இந்த செலவிகள் அனைத்தும் தங்கள் தலையில் விழுந்து விடுமோ என அதிகாரிகள் அச்சத்துடன் நடுங்கி வருகின்றனர்.