
கடந்த சில நாட்களாக நடிகர், நடிகைகள் பலர் அரசியல் பற்றியும் சமூக பிரச்சினைகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தங்களுடைய கருத்தைத் தெரிவித்து தங்களுக்கான அடையாளத்தை தேடிக்கொள்கின்றனர் என பரவலாக ஒரு கருத்து கூறப்பட்டு வருகிறது.
இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளவர்களில் ஒருவர் நடிகை கஸ்தூரி. கமலின் பிறந்த நாள் அன்று வாழ்த்தும் கூறி விட்டு, பிறந்த நாள் அன்று கமல் அணிந்திருந்த ஆடைக்கு காரணம் தில்லி தானோ என கொளுத்தியும் போட்டார்.
தற்போது கமல்ஹாசனை நேரில் சந்தித்துப் பேசி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். மேலும் இதனால் கமல்ஹாசன் கட்சியில் சேர கஸ்தூரி முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் பரவியது.
இதுகுறித்து கஸ்தூரியிடம் கேட்டபோது அவர் அளித்த பேட்டியில்...“நான் தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல்கள் பரவின. இப்போது கமல்ஹாசன் கட்சியில் சேரப்போவதாக பேசுகிறார்கள். பிறந்த நாளையொட்டி கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அரசியல் கட்சிகளில் சேருவது குறித்து உடனடியாக எந்த முடிவையும் நான் எடுத்துவிட மாட்டேன். அரசியல் என்பதை கெட்டவார்த்தையாகப் பார்க்கும் சூழ்நிலை இருக்கிறது. அரசியல்வாதிகள் அந்த மாதிரி ஆகிவிட்டார்கள். நான் சாதாரண பெண். அரசியல்வாதி கிடையாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன். சில நல்லவர்கள் தற்போது புதிய அரசியல்வாதிகளாக உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். நான் ராமராக இருக்க ஆசைப்படவில்லை என கூறியுள்ளார்.