MDMK on PM Modi : தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்கிறோம்... திமுக வழியில் தயாராகும் மதிமுக..!

By Asianet TamilFirst Published Jan 3, 2022, 8:22 PM IST
Highlights

மதிமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. எல்லா மாவட்டங்களிலும் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளோம். ஒமைக்ரான் பரவலால் தேர்தல் தள்ளிப் போகலாம். 

மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரையில் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வீரபாண்டிய கட்டபொம்மன் தியாகம், வீரத்தால் நீங்காத புகழைப் பெற்றவர். விடுதலைக்கான விதையை முதலில் விதைத்தவர் கட்டபொம்மன். அவருடைய புகழ் என்றும் வாழும். இந்த மண்ணுக்கு எல்லா நிறமும், மக்களும் தேவையே. ஆ.ராசாவின் கருத்துக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும், எங்களை தோற்கடிக்க முடியாது என்கிறார். இதை அவரோ, நானோ தீர்மானிக்க முடியாது. மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்.

மதிமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. எல்லா மாவட்டங்களிலும் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளோம். ஒமைக்ரான் பரவலால் தேர்தல் தள்ளிப் போகலாம். ஆனால், தேர்தல் எப்போது, வந்தாலும், கூட்டணியின் தலைமையிடம் பேசி தேர்தலை சந்திப்போம். தேசிய பேரிடர் பாதிப்புகளுக்கென 6 மாநிலங்களுக்கு ரூ.3,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழக முதல்வர் ரூ.6,000 கோடி நிதியைக் கேட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பேரிழவு நடந்திருக்கிறது. இதற்கு மத்திய அரசு முறையாக பதில் ஏதும் அளிக்கவில்லை.

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழக எம்பிக்கள் கொண்ட நாடாளுமன்றக் குழு மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டும் உடனே அவர் ஒதுக்கவில்லை. எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான முறையில் தேவையான நிதியை ஒதுக்க வேண்டு. மாறாக, பாஜக ஆளும் மாநிலங்களுக்கென தனிப்பட்ட எண்ணம்,பாரபட்சம் இருக்கக் கூடாது. இந்திய பிரதமராக தமிழகத்துக்கு வரும்போது, மோடியை வரவேற்கிறோம். தமிழகத்துக்கென திட்டம், நிதியை மறுத்தால் எதிர்போம். தமிழகத்தை மாற்றான் தாய் போன்று மத்திய அரசு பார்க்கக் கூடாது” என்று துரை வைகோ தெரிவித்தார்.

click me!