Annamalai on DMK : பாஜகவுக்கு கறுப்பும் சிவப்பும் தேவை... உடன்பிறப்புகளை அதிர வைத்த அண்ணாமலை.!

By Asianet TamilFirst Published Jan 3, 2022, 8:12 PM IST
Highlights

 பாஜகவுக்கு கறுப்பு, சிவப்பு, நீலம் மட்டுமல்ல அனைத்து நிறங்களும் தேவை. கறுப்பு, சிவப்பையும் நாங்கள் ஒதுக்கமாட்டோம் என்கிறார் அண்ணாமலை.

எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. பாஜகவைத் தோற்கடிக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரையில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ‘காவியை வீழ்த்த கறுப்பு, சிவப்பு, நீலம்என எல்லா நிறங்களும் இணைய வேண்டும்’ என்று திமுக எம்.பி. ஆ.ராசா பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “கறுப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்து பாஜகவைத் தோற்கடிக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியிருக்கிறார். அவர் வேண்டுமானால் நிறத்தை வைத்து அரசியல் செய்யலாம். பாஜக அப்படி அல்ல. பாஜகவுக்கு கறுப்பு, சிவப்பு, நீலம் மட்டுமல்ல அனைத்து நிறங்களும் தேவை. கறுப்பு, சிவப்பையும் நாங்கள் ஒதுக்கமாட்டோம். எல்லா மக்களையும் சேர்த்து அரசியல் செய்ய பாஜக நினைக்கிறது.” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “காங்கிரஸ் ஒரு காற்றடைத்த பலூன். அதனால்தான் ராகுல் காந்தி அவ்வப்போது எங்கேயாவது பறந்து சென்று விடுகிறார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதில் சொல்ல வேண்டும். இந்தியாவில் காங்கிரஸ் கட்சி முடித்து வைக்கப்பட்டு வருகிறது. விரைவில் தமிழகத்திலும் காங்கிரஸ் முடிவுக்கு வந்துவிடும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியில் சேர வேண்டும் என வைகோ பேசியிருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எல்லாக் கட்சிகளும் சேர்ந்துதான் பாஜகவை எதிர்த்தன. ஆனால், என்ன ஆனது? அந்தத் தேர்தலில் பாஜகத்தான் வெற்றி பெற்றது. இதனால் எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. பாஜகவைத் தோற்கடிக்க முடியாது. இது தெரிந்துதான் தற்போது உத்தரப் பிரதேசத்தில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாகத் தேர்தலைச் சந்திக்கின்றன.

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொங்கல் நிகழ்ச்சி மாநில அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி நடத்தப்படும். மாநில அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை பாஜக ஒரு சதவீதம் கூட மீறாத. பிரதமர் மோடி பொங்கல் பண்டிகையில் பங்கேற்பது தமிழ்க் கலாச்சாரத்துக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்பதில் பாஜகவுக்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் மத்திய அமைச்சர் சிந்தியாவின் கருத்தைத் திரித்துப் பரப்புகிறார்கள். தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்காத நிலையில் பல மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருக்கின்றன. ஆனால், தமிழக அரசு இன்னும் விலையைக் குறைக்காமல் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரும் விஷயத்தில் தமிழக நிதியமைச்சர் மறுப்பு தெரிவிக்கிறார். இதில் திமுகவில் குழப்பமும், முரண்பாடும் உள்ளது” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

click me!