
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருதுகணேஷ் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., ஓ.பி.எஸ்.அணி, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை, தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி போன்றவை போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.
வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லோகநாதன் ஆகியோர் ஏற்கனவே மனுதாக்கல் செய்துள்ளனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் தினகரன், ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனன், தீபா, பா.ஜனதா வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்நிலையில், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இன்று வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.