தியாகிகளின் ஓய்வூதியம் உயர்வு.. சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Aug 15, 2021, 11:23 AM IST
Highlights

நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இன்று 101வது நாள். தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. தமிழக நிதி நிலையை மக்கள் அறிந்திருப்பீர்கள்.

3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளது தமிழக அரசு என முதல்வர் ஸ்டாலின்  பெருமிதம் கொண்டுள்ளார்.

75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது, அவர் உரையாற்றிகையில்;- இன்று சுதந்திர தினத்தில் தேசியக் கொடியேற்ற எனக்கு வாய்ப்பு கிடைதத்தில் மகிழ்ச்சி. மாநிலங்களில் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றும் இந்த சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவர் கருணாநிதி. இந்தக் கோட்டையில் முதல்வராகக் கொடியேற்றினார் கருணாநிதி. தமிழக முதல்வர்களுக்கு மட்டுமல்லாது இந்தியாவில் அனைத்து முதல்வர்களுக்கும் அவர் அந்த சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவர்.

இன்று நாம் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த மாதத்துக்கு இன்னும் பல சிறப்புகள் உள்ளன. நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழா, மதுரைக்கு வந்த காந்தி அரையாடை அணிந்த நூற்றாண்டு விழா, வஉசி 150வது ஆண்டு விழாவும் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. புரட்சிக்கவி பாரதி மறைந்து நூறாண்டுகள் ஆகிறது. இவ்வாறாக இந்த ஆண்டு பல்வேறு புகழ் கொண்டது. இருப்பினும் தனிப்பட்ட முறையில், இந்த ஆண்டு 6வது முறையாக திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது என்பதில் எனக்குப் பெருமிதம்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைக்காகப் போராடிய மண் நமது தமிழ் மண். பூலித் தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், தில்லையாடி வள்ளியம்மை, திருவிக, நாமக்கல் ராமலிங்க, பாரதிதேசன், திருப்பூர் குமரன், ஜீவா, கேப்டன் லக்‌ஷ்மி, கே.பி.சுந்தராம்பாள் எனப் பல தலைவர்களின் மூச்சுக் காற்றால் கட்டப்பட்டது தான் இந்த சுதந்திர நினைவுத் தூன். இவர்கள் தமிழக தியாகிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் தியாகிகள். தியாகிகளைப் போற்றும் மண் தமிழகம். அந்த வகையில், தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வுத்தொகையை ரூ.18000 ஆக உயர்த்துகிறது. குடும்ப ஓய்வூதியம் மேலும் ரூ.ஆயிரம் அதிகரிக்கப்பட்டு ரூ.9000 மாக வழங்கப்படும் என்பதை பெருமிதத்தோடு அறிவிக்கிறேன்.

கொரோனா நமக்கு நிறைய படிப்பினை கொடுத்திருக்கிறது. மருத்துவ, பொருளாதார, சூழல் நெருக்கடி எனப் பல நெருக்கடிகளைக் கொடுத்திருக்கிறது. அதனை சமாளிக்க உதவிய சுகாதாரப் பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு நான் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இன்று 101வது நாள். தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. தமிழக நிதி நிலையை மக்கள் அறிந்திருப்பீர்கள்.

ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்த அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது. ரூ.4000 நிதியுதவியை மக்களுக்கு இரு தவணைகளாக வழங்கியிருக்கிறது. 14 பொருட்கள் கொண்ட மளிகைப் பொருட்கள் தொகுப்புப் பை வழங்கப்பட்டுள்ளது. பால், பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளோம். மகளிர், திருநங்கைகளுக்கு கட்டணமில்லா பயணம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், அன்னைத் தமிழில் அர்ச்சணை செய்யலாம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 3 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளது தமிழக அரசு என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

click me!