திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் நடத்திய அதிரடி ரெய்டில் சம்பந்தப்பட்ட நிலத்தில் மணல் அள்ளிய ஒரு ஜேசிபி மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்ததுடன் மூன்று வாகனங்களின் ஓட்டுனர்களையும் பிடித்து மணப்பாறை காவல்நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர்.
மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் எஸ்.ஆரோக்கியசாமி கட்சியில் தற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள முத்தப்புடையான்பட்டியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் நடத்திய அதிரடி ரெய்டில் சம்பந்தப்பட்ட நிலத்தில் மணல் அள்ளிய ஒரு ஜேசிபி மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்ததுடன் மூன்று வாகனங்களின் ஓட்டுனர்களையும் பிடித்து மணப்பாறை காவல்நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திமுக பிரமுகர் ஆரோக்கியசாமி சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து, மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அரசியல் அழுத்தம் காரணமாக பிடிபட்ட சில மணிநேரத்திலேயே காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டன. இந்நிலையில், திமுக பொறுப்பாளர் எஸ்.ஆரோக்கியசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திருச்சி மத்திய மாவட்டம், மணப்பாறை கிழக்கு ஒன்றியக்கழகப் பொறுப்பாளர் எஸ்.ஆரோக்கியசாமி, கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.