என் பிணத்தை தாண்டி தான் மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்த முடியும் என கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசினார்.
பலத்த எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமானது.
இந்த சட்டத் திருத்தத்திற்கு அசாம், திரிபுரா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் டெல்லி, அலிகார் உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்கள் வலுத்துள்ளன.இந்த சட்டத்தால் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வடகிழக்கு மாநிலங்களில் அச்சம் ஏற்பட்டு உள்ளது.
எனவே இந்த சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டம் மேற்கு வங்காளத்திலும் பரவியது. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு வலுக்கும் அதே சமயத்தில், வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
இந்நிலையில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் குடியுரிமை சட்டதிருத்ததிற்கு எதிராக பேரணி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய அவர், நான் உயிருடன் இருக்கும் வரை குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், குடிமக்களின் தேசிய பதிவையும் நாங்கள் செயல்படுத்த மாட்டோம்.
அவர்கள் விரும்பினால் எங்கள் அரசை பதவி நீக்கம் செய்யலாம். ஆனால் நாங்கள் சரணடைய மாட்டோம் என ஆவேசமாக தெரிவித்தார்..
என் பிணத்தை தாண்டிதான் "அவர்கள் மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், குடிமக்களின் தேசிய பதிவையும் செயல்படுத்த வேண்டும். குடிமக்களின் தேசிய பதிவுக்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பியபோது, நாங்கள் தனியாக இருந்தோம். இப்போது, மற்ற முதலமைச்சர்கள் எங்களுடன் பேசுகிறார்கள்.
இன்று டெல்லியின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். பீகார் முதல்வர் குடிமக்களின் தேசிய பதிவை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் அனுமதிக்க வேண்டாம் என்று நான் அவரிடம் கூறி உள்ளேன். மத்திய பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கார் மற்றும் கேரள முதல்வர்களும் இதையே கூறியுள்ளனர்.
இப்படியே போனால் "பாஜகவினர் மட்டுமே இங்கு இருப்பார்கள், மற்றவர்கள் அனைவரும் வெளியேறும்படி செய்வார்கள். அது அவர்களின் அரசியல். இது ஒருபோதும் நடக்காது. இந்தியா அனைவருக்கும் சொந்தமானது. குடியுரிமைச் சட்டம் யாருக்கானது? நாங்கள் அனைவரும் இந்நாட்டின் குடிமக்கள் என கூறினார்.