’வணக்கமுங்கோ! என்ர பேரு கோவை சரளாங்கோவ்’ என்று மக்கள் நீதி மய்யத்தில் வந்து இணைந்துவிட்டார் அம்மணி. ஆக்சுவலாக எப்பவோ எதிர்பார்க்கப்பட்டவர், இப்போதுதான் ஜோதியில் ஐக்கியமாகி இருக்கிறார்.
’வணக்கமுங்கோ! என்ர பேரு கோவை சரளாங்கோவ்’ என்று மக்கள் நீதி மய்யத்தில் வந்து இணைந்துவிட்டார் அம்மணி. ஆக்சுவலாக எப்பவோ எதிர்பார்க்கப்பட்டவர், இப்போதுதான் ஜோதியில் ஐக்கியமாகி இருக்கிறார். கோவை வந்ததால் ம.நீ.ம.வுக்கு என்ன லாபம்? என்று கேட்டால், ஒன்றுமில்லை, மேடை மற்றும் தெருமுனைப் பிரசார்த்தின் போது எக்ஸ்ட்ரா பத்து பேர் வந்து நிற்பதற்கான வாய்ப்புகள் வரலாம், என்பது மட்டுமே! என்கிறார்கள் அக்கட்சியினர்.
அதேவேளையில் ‘நம் கட்சிக்கு மகளிர் ஆதரவு அதிகரித்துக் கொண்டே செல்வதை இந்த இணைவு காட்டுகிறது.’ என்று கமல் சொல்லியிருப்பதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் கடந்து செல்கிறார்கள் அவரது நிர்வாகிகள். கமலின் நிர்வாகிகளிடம் ஏன் இந்த திடீர் ‘களைப்பு, புத்துணர்வு குறைவு’ என்று கேட்டால்...
“எல்லாம் கமலின் செயல்தான். அவர் என்ன நினைக்கிறார்? எதை நோக்கிப் பயணிக்கிறார்? என்றே புரியலை. தினமும் ஒரு புதுப்புது யோசனைகளை அள்ளிவிட்டுக் கொண்டே போகிறார். ஆனால் எதுவுமே சாத்தியப்படுவது போலோ, செய்து முடிக்க கூடியது போலோ இல்லை! இதுதான் பிரச்னையே.
‘மாற்று அரசியல்’ என்று சொல்லித்தான் கட்சி துவக்கினார். ஆனால் கட்சி நகரும் வழியைப் பார்த்தால் எந்த மாற்றும் தெரியவில்லை. நேர்மையானவர்கள், அப்பழுக்கற்ற கைகளை உடையவர்கள்தான் எங்கள் கட்சியில் வேண்டும் என்றார்...ஆனால் இப்போதெல்லாம் வந்து சேரும் சிலரது ஹிஸ்டரியைப் பார்த்தாலே பயமாக இருக்குது.
எங்கள் கட்சி சார்பாக போட்டியிடுபவர்களைக் கட்சியிலிருந்து தேர்ந்தெடுப்பார் என்று நினைத்தோம் ஆனால் திடீரென்று தகுதியுடைய வெளியாட்களும் எங்கள் கட்சியில் விருப்பமனு வாங்கி முயற்சிக்கலாம்! என்றார். கட்சியிலே இல்லாத நபரை, இருக்கிற தேர்தல் பிஸியில் ‘இவர் நல்லவரா? கை சுத்தமானவரா?’ அப்படின்னு எப்படி ஸ்கேன் செய்து முடிவெடுக்க முடியும்?
இந்த லட்சணத்துல நேற்று ‘வேட்பாளர் தமிழன் என்பதாலேயே ஓட்டு போட வேண்டும்! என்பதில்லை. திறமையானவரா என்று தெரிந்து ஓட்டுப் போடுங்க. தமிழராக இருந்தும் திறமை இல்லையென்றால் அவருக்கு ஓட்டு போடக்கூடாது.’ன்னு அறிவித்திருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் இது ஏதோ புரட்சி மாதிரி தோன்றினாலும் கூட உள்ளுக்குள் ஏகப்பட்ட உடைசல்கள் தெரியுது.
’அப்படின்னா..உங்க கட்சியில சேட்டு, மார்வாடி, ஒடியா, உ.பி. ஆளுங்களைக் கொண்டாந்து நிறுத்தப் போறீங்களா? திறமையுள்ள தமிழன் ஆள வரணும்னு சொல்றது சரிதான். ஆனால், தமிழன் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக ஓட்டு போடணும்னு அவசியமில்லைன்னு உங்க தலைவர் சொல்றது அபத்தமா இருக்குது.’ன்னு தாறுமாறா விமர்சனம் பண்றாங்க.
இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதுன்னு தெரியலை. நாளுக்கு நாள் புதுசு புதுசா இவர் பண்றதைப் பார்த்தா பயமா இருக்குது.” என்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் கமலிடம் அரசியல் சிக்கிக் கொண்டு பாடாய்ப்படுது! என்று விமர்சகர்கள் வைக்கும் வாதம் சரிதான் போல.