தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட தென்னிந்தியாவின் அத்தனை மொழிகளிலும் பாடியுள்ள திரைப்படப் பின்னணி பாடகர் மனோ துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திரைப்பட நடிகர் ரஞ்சித் அமமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட தென்னிந்தியாவின் அத்தனை மொழிகளிலும் பாடியுள்ள திரைப்படப் பின்னணி பாடகர் மனோ துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திரைப்பட நடிகர் ரஞ்சித் அமமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சட்டேனபல்லியில் 1965ல் பிறந்தவர் மனோ. இவரது தந்தை ரசூல், விஜயவாடா வானொலி நிலையத்தில் பணியாற்றியவர். தாயார் ஷகீதா மேடை நடிகையாக இருந்தார். இதனால் சிறு வயதிலிருந்தே நடிப்பிலும், பாடல்களிலும் கவனத்தை செலுத்தினார்.
1984ஆம் ஆண்டு முதல் தெலுங்கு இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம் பணிபுரியத் ஆரம்பித்தார். 1986ஆம் ஆண்டு தமிழில் பூவிழி வாசலிலே படத்தில் இடம்பெற்ற "அண்ணே அண்ணே" பாடலைப் பாடும் வாய்ப்பை இவருக்கு வழங்கினார் இசைஞானி இளையராஜா. சின்னத் தம்பி படத்தில் பாடிய "தூளியிலே" என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருது பெற்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் ஆந்திர அரசின் நந்தி விருது, கண்டசாலா விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். மனோவின் மனைவியின் பெயர் ஜமீலா. மனோ - ஜமீலா தம்பதியினருக்கு ஷாகீர், ராபி என்கிற இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் உட்பட அனைத்து மொழிகளிலும் சேர்த்து 30ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மனோ, அதிகபட்சமாக இளையராஜா இசையில் மட்டும் மூவாயிரம் பாடல்கள் வரை பாடியுள்ளார். கரகாட்டக்காரன் படத்தில் இவர் பாடிய ‘குடகுமலைக்காற்றில் வரும்’ பாடலும் ‘நாயகன்’படத்தில் பாடிய ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ பாடலும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ செண்பகமே செண்பகமே’வும் என்றும் மனோகரமானவை.
ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கமல் நடித்த ’சிங்காரவேலன்’ படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து நகைச்சுவை வேடத்தில் நடித்த மனோ, சமீபகாலமாக சின்னத்திரையில் நடக்கும் இசைப் போட்டிகள் பலவற்றிற்கு நடுவராக இருக்கிறார்.