
1991 ஆம் ஆண்டுக்கு முன் உள்ள சொத்துக் கணக்கை சசிகலா வெளியிட முடியுமா? மதுசூதனன் சவால்…
சசிகலா குடும்பத்தினர் கொள்ளையடித்துத் தான் சொத்து சேர்த்தார்கள் என்றும் 1991ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த சொத்து மதிப்பை சசிகலாவால் வெளியிட முடியுமா என ஆர்,கே.நகர் தொகுதி ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் சவால் விட்டுள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ்ஐ பொது மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். எனவேதான் தான் அவரது அணியில் இருப்பதாகவும், ஆர்.கே.நகர், தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.
ஜெயலலிதா குடும்ப ஆட்சியை எதிர்த்துதான் தர்மயுத்தம் நடத்தினார். அதுபோல் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தினை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்துவதாக மதுசூதனன் கூறினார்.
தினகரன், திவாகரன்,சுதாகரன் ஆகியோரை ஜெயலலிதா கட்சியில் இருந்து வெளியேற்றினார். ஆனால் இன்று மன்னார்குடி குடும்பத்தின் கைகளில்தான் அதிமுக சிக்கித் தவிக்கிறது என அவர் கூறினார்.
சசிகலா குடும்பம் கொள்ளையடித்துதான் சொத்து சேர்த்தது என்பதை அவர்கள் மறுக்க முடியுமா என கேள்வி எழுப்பிய மதுசூதனன், 1991 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த சொத்துக் கணக்கை சசிகலாவால் வெளியிடமுடியுமா என சவால் விடுத்தார்.