
கொலை மிரட்டல் விடுத்தாக மதுசூதனன் கூறுவதற்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக இரண்டாக பிளவடைந்து உள்ளதால் சசிகலா தரப்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் போட்டியிடுகிறார்.
ஒ.பி.எஸ் தரப்பில் ஆர்.கே.நகர் மண்ணின் மைந்தன் என அழைக்கப்படும் மதுசூதனன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அதிமுகவின் பிரதான சின்னமான இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்த விவாதம் டெல்லி தேர்தல் ஆணையத்தில் இருதரப்பு வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர்.
இதனிடையே சசிகலா தரப்பு வேட்பாளர் டி.டி.வி தினகரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் ஒ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் மதுசூதனன் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
இதையடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் கூறியதாவது :
ஒ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் மதுசூதனன் பொய் சொல்கிறார்.
நான் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்க வில்லை.
கொலை மிரட்டல் விடுத்ததாக மதுசூதனன் அவதூறு பரப்புகிறார்.
மதுசூதனனின் புகார் பொய் என உறுதியானால் அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இவ்வாறு அவர் தெரிவித்தார்.