அம்மா உணவகங்களை ஆளுங்கட்சிக்கு குத்தகை போல் விடுவதா..? அதிமுக அரசை குட்டிய மு.க. ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Apr 21, 2020, 8:29 PM IST
Highlights

அரசு மானியத்தில் நடத்தப்படும் அம்மா உணவகங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவினரின் கைகளில் ஒப்படைத்திருப்பது மிகவும் மோசமான அரசியல் என்றாலும், இப்போதைக்கு அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களுக்கு வருவோர் அனைவருக்கும் அரசே இலவச உணவு வழங்கிடுவதே இந்த நேரத்தில் இன்னலுக்கு உள்ளாகியிருப்போருக்கு இதயபூர்வமாக ஆற்றும் பணி.

அம்மா உணவகங்களை ஆளுங்கட்சியினருக்கு மட்டும் ‘குத்தகை’க்கு விட்டதைப் போல் தாரைவார்ப்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல என்று  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் செயல்படும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும் இதற்கான செலவை அதிமுக ஏற்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதேபோல பல மாவட்டங்களிலும் அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்படும் உணவுக்கு அந்தந்த மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஏற்றுவருகிறார்கள். இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதைக் குறிப்பிட்டு விமர்ச்னம் செய்துள்ளார்.


 “தொடர் ஊரடங்கு காரணமாகத் தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் இழந்து நிற்கும் ஏழை எளிய மக்களும், அமைப்புசாரா தொழிலாளர்களும் தங்களின் ஒரு வேளை உணவுக்குக்கூட நாள்தோறும் போராடி- அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை ஆங்காங்கே அளித்து வந்தாலும், வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு மேலும் தேவையான நிவாரணத்தை வழங்கிட வேண்டிய மிக முக்கியமான கடமையும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.


இந்த சூழ்நிலையில் அம்மா உணவகங்களில் மலிவு விலையில் உணவு வழங்குவதும், அந்த உணவகங்களை ஆளுங்கட்சியினருக்கு மட்டும் ‘குத்தகை’க்கு விட்டதைப் போல் தாரைவார்ப்பதும் நிச்சயமாக ஏற்புடையதல்ல. அரசு மானியத்தில் நடத்தப்படும் அம்மா உணவகங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவினரின் கைகளில் ஒப்படைத்திருப்பது மிகவும் மோசமான அரசியல் என்றாலும், இப்போதைக்கு அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களுக்கு வருவோர் அனைவருக்கும் அரசே இலவச உணவு வழங்கிடுவதே இந்த நேரத்தில் இன்னலுக்கு உள்ளாகியிருப்போருக்கு இதயபூர்வமாக ஆற்றும் பணி.” என்று மு.க. ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

click me!