ஆசிரியர் தகுதி தேர்வில் சேலத்தில் அதிக தேர்ச்சி எப்படி..? பகீரென டவுட் கிளப்பும் மு.க. ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Feb 13, 2020, 10:48 PM IST
Highlights

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பும் சில தேர்வர்கள், அது சம்பந்தமான புகாரை முதல்வரிடம் கொடுத்துள்ளதாக பேட்டி தந்துள்ளார்கள். அதற்கான விசாரணையை அரசு தொடங்கிவிட்டதா? தொடங்கவில்லை என்றால் உடனடியாகத் தொடங்க வேண்டும். 

டி.என்.பி.எஸ்.சி, காவலர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு என அணிவகுத்து வரும் அனைத்துக் குற்றங்களையும் தொகுத்து அவற்றின் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது அம்பலமானது. இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார்கள் வெளியாகி வருகின்றன. 2013ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் கொங்கு மண்டல பகுதிகளில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று புகார் கூறப்படுகிறது. மேலும் முதல் தாளில் குறைவாக மார்க் வாங்கியவர்கள் இரண்டாம் தாளில் அதிக மார்க் வாங்கியுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம்  தொடர்பாக தொடர்பாக திமுக தலைவர்  தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தொடர்ச்சியாக நடந்த முறைகேடுகள் தொடர்பான கைதுப்படலங்கள் நீடித்து வரும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது குறித்த புகார்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.


முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பும் சில தேர்வர்கள், அது சம்பந்தமான புகாரை முதல்வரிடம் கொடுத்துள்ளதாக பேட்டி தந்துள்ளார்கள். அதற்கான விசாரணையை அரசு தொடங்கிவிட்டதா? தொடங்கவில்லை என்றால் உடனடியாகத் தொடங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்ட வேண்டும். டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2A, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, காவலர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு என அணிவகுத்து வரும் அனைத்துக் குற்றங்களையும் தொகுத்து அவற்றின் மீது, சிபிஐ விசாரணை நடத்த கால தாமதமின்றி உடனடியாக உத்தரவிடப்பட வேண்டும்.” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!