எந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம், யாரை பழிவாங்கலாம்ன்றதை கைவிடுங்க... சரியும் பொருளாதாரத்தை சரி செய்யுங்க... பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை!

By Asianet TamilFirst Published Sep 1, 2019, 9:20 PM IST
Highlights

ஏதோ பத்திரிக்கை பேட்டிகள், விளம்பரங்கள், அறிவிப்புகள் போன்றவற்றை மட்டும் முன்னிறுத்தி பொருளாதாரப் பின்னடைவுகளை மக்களின் கண்களில் படாமல் மறைத்து விட முடியும் என்று மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மனப்பால் குடிப்பது, 'இமயமலையை இலைச் சோற்றுக்குள்' மறைத்து விடச் செய்யும் முயற்சி!
 

எத்தகையை சோதனைகளையும் சமாளித்து சிலிர்த்து எழும் வல்லமை இந்தியப் பொருளாதாரத்திற்கு உண்டு என்பதை உணர்ந்து, உரிய வகையில் பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை, மேலும் தாமதம் செய்யாமல் எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அவசரம் அவசரமாக அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டம் போன்ற மிகப்பெரிய பிழைகளில் இருந்து இந்தியப் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்பது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்துள்ளதில் பிரதிபலிக்கிறது என்று பொருளாதார நிபுணரும், முன்னாள் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதாரம் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் தொடர்ச்சியானதும், மிகத் தவறானதுமான முடிவுகளால் அதலபாதாளத்தை நோக்கிப் படு வேகமாகப் பயணித்துக் கொண்டிருப்பதை, அகில உலகமும் உற்று நோக்கும்படி வெளிப்படுத்தியிருக்கிறது.


ஆனால், பிரதமர் மோடியோ நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை.வரலாறு காணாத வகையில், வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாற்பது ஆண்டு காலத்தில் நாடு கண்டிராத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகிவிட்டது. கிராமப்புற பொருளாதாரம் அடியோடு நலிவடைந்து கீழ்நிலைக்குப் போய்விட்டது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறுதொழில் செய்வோர், வருமானம் இல்லாமல் வறுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உற்பத்தித் துறை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, அதன் வளர்ச்சிநிலை குலைந்துப் போய் நிற்கிறது.


நாட்டு மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ள பொருளாதாரப் பின்னடைவுகள் குறித்து, உரிய ஆலோசனைகளைப் பெற்று, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பா.ஜ.க. அரசின் கவனமும் முன்னுரிமைகளும் வேறு வகையாக இருப்பது கவலையளிக்கிறது. ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் பிளவு மனப்பான்மையை உருவாக்குவது, மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, சமூத நீதியை சீர்குலைப்பது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு குழி பறிப்பது போன்ற செயல்திட்டங்களுக்கு மட்டும் மத்திய பா.ஜ.க. அரசு முன்னுரிமை கொடுப்பது வேதனையளிக்கிறது.
ஏதோ பத்திரிக்கை பேட்டிகள், விளம்பரங்கள், அறிவிப்புகள் போன்றவற்றை மட்டும் முன்னிறுத்தி பொருளாதாரப் பின்னடைவுகளை மக்களின் கண்களில் படாமல் மறைத்து விட முடியும் என்று மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மனப்பால் குடிப்பது, 'இமயமலையை இலைச் சோற்றுக்குள்' மறைத்து விடச் செய்யும் முயற்சி!
எதிர்க்கட்சிகளைப் பழி வாங்குவது, எந்த மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பது, எந்த மாநிலத்தில் உள்ள ஊழல் ஆட்சியை அடிமைச் சேவகம் கருதி, தொடர அனுமதிப்பது, எந்த கட்சியிலிருந்து எம்.எல்.ஏ., எம்.பி.,க்களை அச்சுறுத்திப் பிரித்து பா.ஜ.க.,வில் சேர்ப்பது போன்றவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்திட்டங்களாக நிச்சயம் இருக்க முடியாது. அப்படி இருக்கும் என்று நம்புவது நிச்சயமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் எண்ணவோட்டமாகவும் இருக்க முடியாது.


சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை உலக நாடுகள் மத்தியில் தலை நிமிர வைக்கவும், இரண்டாவது முறையாக வாக்களித்த மக்களின் எதிர்கால வாழ்க்கையைப் பாதுகாக்கவும் தேவையான அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய மிக முக்கியமான கடமை பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கிறது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எத்தகையை சோதனைகளையும் சமாளித்து சிலிர்த்து எழும் வல்லமை இந்தியப் பொருளாதாரத்திற்கு உண்டு என்பதை உணர்ந்து, உரிய வகையில் பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை, மேலும் தாமதம் செய்யாமல் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!