டீசல் விலை கடும் உயர்வு … லாரி வாடகை 25 % அதிகரிப்பு.. அடுத்து என்ன ? எல்லாப் பொருட்களின் விலையும் உயரும் !!

By Selvanayagam PFirst Published Sep 25, 2018, 7:26 AM IST
Highlights

டீசல் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதால் இன்று முதல் லாரி வாடகையை அதன் உரிமையாள்ர்கள் 25 சதவீத அளவுக்கு உயர்த்தியுள்ளனர். இதனால் அடுத்தடுத்து அத்தியாவசிப் பொருட்களின் விலையும் கடுமையான உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. குறிப்பாக டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் டீசல் விலை உயர்வை காரணம் காட்டி லாரி சரக்கு வாடகை கட்டணத்தை உயர்த்துவது பற்றி தமிழ்நாடு லாரி சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் தீவிர ஆலோசனை மேற்கொண்டது.

இதையடுத்து தமிழ்நாட்டில் லாரி சரக்கு கட்டணம் 25 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்றும், இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கட்டண உயர்வு நேற்று  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. மத்திய அரசு டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினசரி டீசல் விலை உயர்வால் தங்களுடைய தொழில் நலிவடைந்து வருகிறது.

எனவே வேறு வழியின்றி சரக்கு லாரிகளின் வாடகை கட்டணத்தை 22 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறோம். இடம், எடை, பொருட்கள் ஆகியவற்றை மையப்படுத்தி கட்டண உயர்வு இருக்கும்.

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.8 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்ட சரக்கு வாடகை கட்டணம் ரூ.10 ஆயிரமா கவும், சேலத்தில் இருந்து திருச்சி, கோவைக்கு ரூ.6 ஆயிரமாக இருந்த கட்டணம் ரூ.7 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வடமாநிலங்களுக்கு செல்லும் லாரி வாடகை கட்டணம் ரூ.25 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கான கட்டணத்தை ரூ.1.15 லட்சத்தில் இருந்து ரூ.1.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரையில் ஒரு டன் மளிகை பொருட்களை எடுத்து செல்வதற்கு ரூ.1,200 கட்டணமாகவும், இரும்பு பொருட்களை எடுத்து செல்வதற்கு ரூ.1,250 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது.

தற்போது 25 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டீசல் விலையை பழைய நிலைமைக்கு கொண்டு வரும்பட்சத்தில், உயர்த்தப்பட்ட வாடகை கட்டணத்தை குறைக்க லாரி உரிமையாளர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஏறகனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஷேர் ஆட்டோ பயண கட்டணம் உயர்த்தப்பட்டது. மாநகர பஸ்களிலும் பயணிகள் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் அதிரடியாக விலை ஏற்றப்பட்டது. இந்த நிலையில் சரக்கு லாரி வாடகை கட்டணமும் அதிகரித்து இருக்கிறது.

சரக்கு லாரிகள் கட்டண உயர்வால், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

click me!