இதுதான் உங்களுக்கு கடைசி பட்ஜெட்... அதிமுகவுக்கு கிலி காட்டும் தோழர்கள்!

By Asianet TamilFirst Published Feb 14, 2020, 10:02 PM IST
Highlights

“தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2020-21 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க ஆட்சி நிறைவு பெறும் காலத்தின் கடைசி நிதிநிலை அறிக்கை. அடுத்த ஆண்டு எதிர்கொள்ளும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மக்கள் ஆதரவைப் பெற வேண்டும் என்ற ‘ஆசை’யில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது."

அதிமுக அரசுக்கு இதுதான் கடைசி பட்ஜெட் என்று இடதுசாரிகள் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்

.
தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சக பொறுப்பை வகித்துவரும் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். “2020-21 நிதிநிலை அறிக்கை தமிழக அ.தி.மு.க அரசின் கடைசி பட்ஜெட். இது மாதிரியான வாய்ப்பினை மீண்டும் ஒருமுறை அதிமுகவிற்கு தமிழக மக்கள் வழங்கமாட்டார்கள் என்பதை இந்த பட்ஜெட் உரை தெளிவாக்குகிறது.
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளையும், உரிய வரி பங்கீட்டையும் தர மறுப்பதும், தாமதப்படுத்துவமான வஞ்சகப் போக்கையே மத்திய அரசு கடைபிடிக்கிறது. ஆனால் தமிழகத்தின் உரிமைகளை கேட்டுப் பெறுவதற்கு தைரியம், திராணியற்ற அரசாக அ.தி.மு.க அரசு உள்ளது என்பதை இந்த பட்ஜெட் உரை எடுத்துக் காட்டுகிறது. இந்த அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து தனது ஆட்சியை மட்டும் தக்க வைத்துக் கொள்வதில் குறியாக இருப்பதால், தமிழக மக்களின் நலன்கள், உரிமைகள் எல்லாம் மத்திய அரசிடம் காவு கொடுக்கப்படுகின்றன.


மாநில அரசின் வரி வருமானம் வேகமாக குறைந்து, நிதி நிர்வாகம் மோசமாகியுள்ளது. உலக வங்கியிடம் கடன் வாங்குவதால் மோசமான நிபந்தனைகளை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதுபற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தமிழக மக்களை அடகு வைக்கும் நிலைமைக்கு அதிமுக அரசு வந்துள்ளது. மொத்தத்தில் தமிழக அரசின் இந்த பட்ஜெட் தமிழக பொருளாதாரம் திவாலாக்கப்படுவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது."
இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2020-21 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க ஆட்சி நிறைவு பெறும் காலத்தின் கடைசி நிதிநிலை அறிக்கை. அடுத்த ஆண்டு எதிர்கொள்ளும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மக்கள் ஆதரவைப் பெற வேண்டும் என்ற ‘ஆசை’யில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி வசூல் காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்படியும் இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 7,500 கோடி ரூபாயை பெறுவதற்கு அழுத்தம் தரத் தயாராக இல்லை.
இதுவரை தமிழ்நாடு அரசு பெற்றுள்ள கடன் தொகை 4 லட்சத்து 56 ஆயிரத்து 661 கோடி. மாநில வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இந்த நிலையில் மக்கள் மீது செலவுச் சுமை ஏற்றுவதை நிதிநிலை அறிக்கை மறைத்துள்ளது. தூர்வாருவதில் ‘அக்கறை ‘ காட்டும் நிதிநிலை அறிக்கை, உடல் உழைப்பு தொழிலாளர்களின் பல்வேறு வாரியங்களுக்கு ஒதுக்கியுள்ள தொகை மிகச் சொற்பமானது.  வெளிநாட்டு முதலீடு வருகிறது என நாளொருமேனியும் பொழுதொருவண்ணமும் முழங்கப்படுகிறது. இதுபற்றி நிதிநிலை அறிக்கையில் தேடிப்பார்த்தாலும் ஒன்றும் உருப்படியாகத் தேறவில்லை. முடங்கிக் கிடக்கும் சிறு குறு, நடுத்தர தொழில்களுக்கு புத்துயிரூட்டும் திட்டங்களும் இல்லை.
ஆரம்ப சுகாதாரம், மருத்துவம் என மக்கள் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் தரவில்லை. தாய் சேய் நலனுக்கு முக்கிய காரணமான ஆஷா பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதியம் குறித்து கவலைப்படவில்லை. மொத்தத்தில் அலங்கார வார்த்தைகளால் கட்டப்பட்ட தோரணங்களாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. இது அ.தி.மு.க தேர்தல் பரப்புரைக்கான தயாரிப்பு தவிர வேறொன்றும் இல்லை” அறிக்கையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

click me!