கோவிலை விடுங்க, முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள். நீதி மன்றம் அட்வைஸ்.

By Ezhilarasan BabuFirst Published Nov 8, 2021, 1:25 PM IST
Highlights

இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு,  கோவில்களில் இரவு நேர பாதுகாவலர்கள் நியமனம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், இந்த வழக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என கூறி மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை முடித்து வைத்தது

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு  பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவில்கள் சம்பந்தமான விஷயங்களில் கவனம் செலுத்தாமல் பிற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளது. திருநெல்வேலி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், சமீப காலங்களில் தமிழக கோவில்களில் இருந்து சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் அமெரிக்கா சென்றிருந்த போது, அங்கு இருந்த புன்னைநல்லூர் சோழர்கால நடராஜர் வெண்கல சிலை உள்ளிட்ட 157 சிலைகள் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 

கோவில்களில் போதுமான பாதுகாப்பு இல்லாததே சிலை திருட்டுகளுக்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், தற்போது கோவில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், மனித பாதுகாப்பால் மட்டுமே இதுபோன்ற திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஏ.டி.எம். மையங்களுக்கு கூட இரவு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கியமான கோவில்களுக்கு பாதுகாவலர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், சில கோவில்களில் இரவு காவலர்கள் நியமிக்கப்பட்ட போதும், அவர்களுக்கு 3,500 முதல் 5,500 ரூபாய் வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் இரவு பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் எனவும், கோவில்களில் இரவு பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள வர்களுக்கு பணி வரன்முறை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு,  கோவில்களில் இரவு நேர பாதுகாவலர்கள் நியமனம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், இந்த வழக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என கூறி மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை முடித்து வைத்தது. அதேசமயம், கோவில்கள் சம்பந்தமாக ஏராளமான வழக்குகள் தொடரப்படுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், பல முக்கிய பிரச்னைகள் உள்ள நிலையில் பொதுநலனில் அக்கறை கொண்டவர்கள், கோவில்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், கல்வி, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பிற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

click me!