அரசு மருத்துவமனையில் குமரி அனந்தன்! தமிழிசையை வம்புக்கு இழுக்கும் கலைராஜன்!

First Published Nov 19, 2017, 3:30 PM IST
Highlights
Kumari Ananthan at Government Hospital


மூத்த காங். தலைவர் குமரி அனந்தனின் மகள் மற்றும் மருமகன் இருவருமே மருத்துவர்கள் ஆனாலும், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வி.பி. கலைராஜன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுடைய தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக குமரி அனந்தன், பாரத மாதாவுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி சென்னையில் இருந்து தருமபுரி வரை 21 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார். நதிகள் இணைப்பு, மத நல்லிணக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் இந்த பயணத்தில் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து குமரி அனந்தன் உண்ணாவிரத போராட்டமும் மேற்கொண்டார்.

உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த குமரி அனந்தனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குமரி அனந்தன் பேசும்போது, சமத்துவ பொதுக்கோயில் ஒன்றை தமிழக அரசு கட்ட வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறேன். இந்த கோரிக்கையைத் தமிழக அரசிடம் முன் வைத்து உண்ணாவிரதம் இருந்து வந்தேன். தருமபுரியில் நான் உண்ணாவிரதம் இருந்தபோது, அதிகாரிகள் என்னிடம் வந்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டனர். நான் மறுத்தபோது கைது நடவடிக்கை பாயும்
என எச்சரிக்கையும் வந்தது. 

ஆனால் ஒருநாள் திடீரென என்னை ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றில் ஏற்றி  தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து நான் வசித்து வரும் ராயப்பேட்டையில் உள்ள என்னுடைய வாடகை வீட்டில் வந்து என்னை விட்டுச் சென்றனர். எனது உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிடுமாறு திருநாவுக்கரசர், மு.க.ஸ்டாலின், திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டனர். அதன் காரணமாக நான் கையிலெடுத்த போரை கைவிட்டேன். உடல்நலமில்லாத காரணத்தால் இங்கு (ராயப்பேட்டை அரசு மருத்துவமனை) வந்து சிகிச்சை பெற்று வருகிறேன் என்று
கூறியிருந்தார்.

குமரி அனந்தனின் மகள் தமிழிசை சௌந்தரராஜன் மருமகன் சௌந்தரராஜன் இருவருமே மருத்துவர்கள். மகள் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜகவின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், குமரி அனந்தன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறித்து டிடிவி தினகரன் ஆதரவாளர் வி.பி. கலைராஜன் கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த வி.பி. கலைராஜன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள் மற்றும் மருமகன் இருவருமே மருத்துவர்கள் என்றும் ஆனால், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார்.

click me!