உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்பதில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறி உள்ளார்.
வேலூர்: உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்பதில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறி உள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் களம் பரபரப்பான நிலையில் உள்ளது. தேர்தலின் போது அரசியல் கட்சிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந் நிலையில்,உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடக்குமா என முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி சந்தேகம் எழுப்பி இருக்கிறார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பேசிய போது அவர் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெறும். ஆனால் அதனை தடுக்க திமுக வன்முறையில் ஈடுபவது கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வில் அதிமுக நிலைப்பாட்டை திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது. இந்த தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும் மாணவர்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது. தேர்தல் நடக்கும் முன்பே அராஜகங்களில் திமுக ஈடுபடும் நிலையில் நியாயமாக இந்த தேர்தல் நடத்தப்படுமா என சந்தேகம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.