நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் ரூ.1001 பரிசு - அறிவித்த அர்ஜுன் சம்பத் மீது போலீசார் வழக்குப் பதிவு

By manimegalai aFirst Published Nov 17, 2021, 7:26 PM IST
Highlights

நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு என அறிவித்த ‘இந்து மக்கள் கட்சித் தலைவர்’ அர்ஜுன் சம்பத் மீது  2 பிரிவுகளில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

நடிகர் விஜய் சேதுபதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவமரியாதையாக பேசியதாகவும், அதனால் நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் 1001 ரூபாய் பரிசு தருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ட்விட்டரில் அறிவித்து இருந்தார்.இந்த பதிவு மிகவும் சர்ச்சைக்குள்ளானது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி, சமீபத்தில்  பெங்களூரு விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

பின்னர், அந்த நபர் விமானத்தில் மது அருந்திவிட்டு இருந்ததாகவும், அவர் விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பியதாகவும் ஆனால், மது அருந்தி இருந்ததால் விஜய் சேதுபதியின் உதவியாளர் ஜான்சன் செல்ஃபி எடுக்க மறுத்ததாகவும் கூறப்பட்டது. இதனால், விஜய் சேதுபதி உதவியாளருக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, பிறகு அது கைகலப்பு ஆனது என்று கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விமான நிலைய போலீசார் விசாரித்து இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்திய நபர், தனது பெயர் மகா காந்தி என்றும், விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக நன்றி தெரிவிக்க சென்றதாகவும், ஆனால், அவர் இது தேசமாக என்று கேட்டதாகவும் விஜய் சேதுபதி மீது குற்றம் சாட்டினார். மேலும், விஜய் சேதுபதியை குரு பூஜைக்கு வந்தீர்களா ?  என்று கேட்டதற்கு குரு என்றால் யார் என்று கிண்டலாக கேட்டார்.அதுமட்டுமின்றி விஜய் சேதுபதியின் உதவியாளர்கள் தன்னை அடிக்க வந்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில்,  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், முத்துராமலிங்கத் தேவரை அவமரியாதை செய்யும் விதமாக பேசிய விஜய் சேதுபதியை உதைத்தால் அவர்களுக்கு 1001 ரூபாய் பரிசு அளிப்பதாக ட்விட்டரில் கருத்தை பதிவிட்டார்.இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் சேதுபதியை அச்சுறுத்தும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா ? என்ற கேள்வி எழுந்தது. அர்ஜூன் சம்பத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது அர்ஜுன் சம்பத் மீது  2 பிரிவுகளில் கோவை கடைவீதி காவல் நிலைய  போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


 

click me!