கொங்குநாடு தமிழ்நாட்டில்தான் உள்ளது. அதற்கான விதை போடப்படவில்லை என்று தமிழக பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நெல்லை பாளையங்கோட்டையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். “நம்ம ஊரு பக்கத்தில் வல்லநாடு உள்ளது. தேனி பக்கத்தில் வருஷநாடு உள்ளது. மணப்பாறை அருகே வளநாடு உள்ளது. அதையெல்லாம் மாநிலமாக பிரிக்கலாமா? எதற்கு அவர்களுக்குப் பயம். பயமெல்லாம் தேவையில்லை. எல்லாம் தமிழ்நாடுதான். ஆனால், ஒன்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆந்திரா இரண்டாக பிரிந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. மாநிலங்களை இரண்டாக பிரிப்பது என்பது மாநில மக்களின் எதிர்பார்ப்பையும் நோக்கத்தையும் உணர்த்துகிறது. மாநில மக்களுடைய எதிர்பார்ப்பு அப்படி இருக்கும் என்றால் அதை செய்ய வேண்டியது அரசின் கடமை.” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அப்படியெனில் அதற்கான விதை போடப்பட்டிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “ஏன் அப்படி ஒரு சந்தேகம். அப்படி எந்த ஒரு விதையும் போடவில்லை. கொங்குநாடு தமிழ்நாட்டில்தான் உள்ளது. அது உங்களுக்கு தெரியும். ஏற்கனவே ஒன்றிய அரசு என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே குறுகிய கன்னோட்டத்தோடு போய்க்கொண்டிருக்கிறது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.