கொங்குநாடு என்பது பாஜகவின் கருத்தல்ல. ஊடகங்களில் வெளியான செய்தியே தவிர, இது பாஜகவின் கருத்து அல்ல. இது குறித்து உயர் மட்டக் குழு முடிவு எடுக்கும் என்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக அரசு நீட் தேர்வை கொள்கை ரீதியாக ஏற்க வேண்டும். 7.5 சதவீதமாக உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயர்த்த வேண்டும். அதேபோல தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கையில், தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தப்படி பெட்ரோலுக்கு 5 ரூபாயும், கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாயும் குறைக்க வேண்டும்.
கொங்குநாடு என்பது பாஜகவின் கருத்தல்ல. ஊடகங்களில் வெளியான செய்தியே தவிர, இது பாஜகவின் கருத்து அல்ல. இது குறித்து உயர் மட்டக் குழு முடிவு எடுக்கும். அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தனது சொந்த தொகுதியில் சிறப்பாக பணியாற்றியிருந்தால் வெற்றி பெற்றிருப்பார். அவர் அதைச் செய்யாததால்தான் தோல்வியைத் தழுவிவிட்டு, தனது சொந்த தோல்வியை கூட்டணியின் தோல்வியாக மாற்ற முயற்சிக்கிறார். ஆனால், அதற்கு அதிமுகவின் தலைமையே கொட்டு வைத்துவிட்டது” என்று எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார்.