Tamilnadu Rain :முதல்வர் அலுவலகத்திலேயே புகுந்த வெள்ளம்… கொளத்தூரா இல்ல குளத்தூரா..? கடும் கோபத்தில் மக்கள்

By Raghupati RFirst Published Nov 29, 2021, 10:44 AM IST
Highlights

முதல்வரின் தொகுதியான கொளத்தூர் முழுவதும் வெள்ளத்தால் மிதந்து கொண்டிருக்கிறது. இதனால் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர் பொதுமக்கள்.

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.சென்னையே வெள்ளத்தால் மிதந்து கொண்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான ‘கொளத்தூரும்’ தப்பவில்லை. கடந்த ஒரு வாரமாகவே தொகுதி முழுக்க வெள்ளத்தால் தத்தளிக்கிறது.

குறிப்பாக  ஜவஹர் நகர், வெற்றி நகர், அஞ்சுகம் நகர், திருப்பதி நகர் பெரியார் நகர் 70 அடிச்சாலை பெரவள்ளூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.பல்வேறு தெருக்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் நீரில் மூழ்கியுள்ளன. சில தெருக்களில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கிள்ளது. மேலும், பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

‘மூன்று முறை  சட்டமன்ற உறுப்பினர், இரண்டுமுறை கொளத்தூரை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சி மேயர், ஒரு முறை தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர், இப்போது முதல்வர் என மு.க ஸ்டாலினின்   தொகுதியிலேயே இப்படியா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும் வெள்ளத்தில் தப்பவில்லை. வீடுகள்,அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் வெள்ள நீர் புகுந்து மக்களை அவதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இன்று காலை கொளத்தூர் மக்கள், வெள்ள நீர் பாதிப்பை சரி செய்யாத தமிழக அரசை கண்டித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசிய அவர்கள் ‘அரசு நிர்வாகம் இது போன்ற பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்பட வேண்டும். ஆனால் , அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ எங்களை கண்டுகொள்ளவே இல்லை. கடந்த ஒரு வாரமாக எந்தவித மீட்பு பணியோ, நிவாரண உதவியோ வழங்கப்படவில்லை. கடந்த வாரம் கொளத்தூரில் ஆய்வு செய்தார்  முதல்வர் ஸ்டாலின். வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே  வந்தார்.கடந்த 2 வாரங்களாக எந்த வித பணியையும் மேற்கொள்ளாமல், இழுத்தடித்து வருகின்றனர். பல்வேறு முறை அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் இன்று முதல்வரை கண்டித்து போராட்டத்தை மேற்கொண்டோம்’ என்றனர்.

click me!